திரு.ஈ.வே.இராமசாமி நாயக்கரின் பொருளாதார அறிவு; திருக்குறளும் அவற்றில் சிலதின் கருத்துக்களும் … திரு.வே.பிரபாகரன் தளபதியா அரசியல்வாதியா?


ஏலையா க.முருகதாசன்.
தமிழ்நாட்டில் இப்பொழுது பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகின்றது.அந்தச் சலசலப்புக்கு காரணமாக இருப்பவர்களில் இருப்பவர் ஒருவர் இல்லாதவர் ஒருவராகும்.
பொதுவாக தமிழர்களிடம் காணப்படும் மனப்பான்மைகளில் ஒன்று ஒருவரின் சில குணங்கள் நல்லதாகவோ,அறிவியல் சார்ந்த சிந்தனைகளில் ஏற்றுக் கொள்ளக்கூடியவை இருந்தாலோ,ஒருவர் முற்றுமுழுதாகவே சரியான சிந்தனை உள்ளவர் என்றும்,அவர் சொல்லும் அனைத்துமே சரியானவை என்றும் முடிகெடுத்து,அவரை ஒரு உதாரணமாக்கி அவர் வழியை நேர்த்தியான வழி என்றும்,கடவள் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்றும் முடிவெடுப்பது மட்டுமல்ல அவரைப் பற்றியே விதந்துரைத்துக் கொண்டே இருப்பதும் உண்டு.
திருவள்ளுவரின் திருக்குறள்களிலேயே சில ஏற்றுக் கொள்ள முடியாதவையாகவும் கருத்துக் குழப்பங்கள் உள்ளவையாகவும் இருக்கின்றன.
உதாரணமாக கடவுள் வாழ்த்தில்,அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது என்பதில்,
இக்குறளில் அந்தணன் என்ற சொல் பொதுமனிதர்களில் பிராமணன் என்று சமூகப் பிரிவு விளித்தலுக்குரியவர்களாக அதற்கான ஒத்த சொல்லாக அந்தணன் என்ற சொல்லும் பிரிவு விளித்தலிலும் உண்டு.
புராணங்களில் இதிகாசங்களில் நிகழ்வுகளைப் பற்றிக் கூறுகையிலும் ஏன் சமகாலத்திலும் சமயச் சடங்குகளிலும் கோவில் சடங்குகளிலும் பிராமண சமூகத்தை இன்னும் உயர்வாகக் கூற வேண்டுமென்பதற்காக ஆயிரம் அந்தணர்கள் வேதம் ஓதி நெய் சொரிந்து யாகம் நடைபெற்றது எனச் சொல்லி அதுவே யாகநிலையின் நிலையை சொல்வதை நாம் கேள்விப்பட்டு வருகின்றோம்.
ஆனால் இக்குறளுக்கான விளக்கத்தில் அந்தணன் என்ற சொல் கடவுளைக் குறிப்பதாகவும் அதன் பொருளாகவும் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
எனவே இதன் அர்த்தம் அந்தணர்களாகிய பிராமணர்களும் கடவுளுக்கு ஈடானவர்களா என பகுத்தறிவுக் கேள்வி எழுப்பப்படுமானால் அதனைத் தவறென்று எவ்வாறு உரைக்க முடியும்.
இது இன்னொரு நுண்ணறிவு ஊடுருவல் சிந்தனையையும் கொண்டுள்ளது.அது இந்தத் திருக்குறள் இடையில் செருகப்பட்டதா என்பதுடன் அந்தணன் என்ற சொல்லும்கூட செருகப்பட்டு,கவனப்படுத்தலுக்குட்பட்டும்
கவனப்படாமலும் எமக்கென்ன என்று கேள்வி எழுப்பப்படாமல் விட்டதினாலும் அந்தணன் என்ற சொல் அப்படியே கண்டும் காணாமலிருக்கின்றதா என்பதாகக் கூட இருக்கலாம்.
சில உண்மைகளை மற்றவர்கள் உணரட்டும்,எதுவாக நினைக்கிறார்களோ அதுவாக தானாக அவரவர் மனதில் ஏதோ ஒரு மூலையில் இருக்கட்டும்,தேவையேற்படும் போது அதனை வெளிப்படுத்தலாம் என்பது போன்றதே மேற்கூறிய குறளின் சாரசம்சமாகும்.
இன்னொரு குறள், தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்பதாகும்;.
இந்தக் குறளின் கருத்தினை திருக்குறளைப் படித்தவர்கள் அனைவரும் அறிவார்கள்.இது பிற்போக்குத்தனமான குறள் என்பதையம் பலர் அறிவார்கள் பலராலும் சொல்லப்பட்டதையும் அறிவோம்.
இக்குறள் பற்றி நடந்த ஒரு சுவாரசியமான வாக்குவாதத்தை கீழே விபரிக்கிறேன்.நானும் அந்த இடத்தில் இருந்தேன் என்பதால் அன்றைய வாக்குவாதத்தில் காணப்பட்ட சாரசம்சம் இன்னும் பசுமையான நினைவாக எனக்குண்டு.
1966 ஆம் ஆண்டு இலங்கை,கொழும்பு கொள்ளுப்பிட்டி கிறீன்பாத் ஒழுங்கையில் உள்ள எங்கள் எல்லோராலும் ஐயா என்று மரியாதையுடனும் அன்பாகவும் அழைக்கப்படும் திரு.அ.கந்தையா அவர்களின் வீட்டில் இக்குறள் சம்பந்தமாக பெரும் விவாதமே நடந்தது.
ஏங்களுடைய தாயார் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் நோயாளியாக வார்ட்டில் இருந்தார்.நீர்கொழும்புக் கொச்சிக்கடையில் பெரியம்மாவின் வீட்டிலிருந்துதான் மாமாவும் அண்ணையும் கொழும்பிற்கு தினசரி வேலைக்குப் போய் வருவார்கள்.
மாமாவும் அண்ணையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள்.நானும் கொச்சிக்கடையில் பெரியம்மா வீட்டிலேயே தங்கியிருந்த போதும் அம்மாவை ஒவ்வொரு நாளும் ஆஸஇபத்திரியில் போய்ப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஐயாவின் வீட்டில் தங்கி நின்று அம்மாவைப் போய்ப் பார்த்து வருவேன்.
மாமாவும் அண்ணையும் அடிக்கடி ஐயாவின் வீட்டுக்குப் போய் அரசியல் தொடக்கம்
இலக்கியம் வரை கலந்துரையாடி சிரித்துக் கதைத்துவிட்டு வருவார்கள்.
ஒரு நாள் நான் அங்கு நின்ற போது,ஐயாவின் உறவினரான சட்டத்தரணி யோகநாதன் அவர்களும் வந்திருந்தார்.(பின்னாட்களில் அவர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதாக அறிந்தேன்)
மாமா,அண்ணை,சட்டத்தரணி என்பவர்களுக்கிடையில் பல உரையாடல்களுக்கு மத்தியில் தெய்வம் தொழா அள் என்று தொடங்கும் திருக்குறள் சம்பந்தமான விவாதம் நடைபெற்நது.
அப்பொழுதே இக்குறள் தவறான முன்னுதாரணம் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டதுடன்,கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் இக்குறள் சம்பந்தமான அதிருப்தியைப் பல இடங்களில் தெரிவித்ததைக் கூறி மழை வேண்டும் என்றால் ஒரு கற்புள்ள பெண்ணிடம் போய் நீ வயலில் நின்று மழையே வா என்று சொல் என்று சொல்ல முடியுமா,கற்புள்ள பெண் என்பதற்கு என்ன வரைமுறை இருக்கின்றது,யாரைத் தேர்ந்தெடுப்பது,அப்படிச் சொல்பவரின் ஒழுக்கத் தகுதியென்ன,பல பெண்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதால் மற்றைய பெண்களின் நிலை என்ன,எல்லாவற்றுக்கும் மேலாக கற்பென்றால் ஒழுக்கத்தில் அது உடல் சார்ந்ததும் கட்டுப்பாடான மனம் சார்ந்ததும் என்ற வரையறையை கொண்டிருக்கிறோமென்றால்,,இதில் மனம் கட்டுப்பாட்டில்தான் இருக்கன்pறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று பல கோணங்களில்,பல உதாரணங்கள் எடுத்துக் காட்டுகள் எனக் கருத்துப் பரிமாறல்களும் விவாதங்களும் தொடர்ந்தது.
திருவள்ளுவரின் திருக்குறள்களில் சிலவற்றைப் போல இதுவும் ஒப்புக் கொள்ள முடியாத குறள் என ஒரு முடிவுக்கு வந்தனர்.பாடசாலையில் சொல்லிக் கொடுத்ததைப் படித்து,அதனைப் பாடமாக்கி பரீட்சைகளில் அதனை எழுதி ஒப்புவித்து எத்தனையாவது அதிகாரம் எத்தனையாவது குறள் என்பதையும் எழுதி புள்ளிகள் பெற்ற எனக்கு 1966ஆம் ஆண்டு கொழும்பு,கொள்ளுப்பிட்டியில் திருக்குறள்களிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை உண்டென்பதை விவாதத்தின் முடிவில் அது வெளிச்சமாக்கியது.
இதைவிட மாமாவும் அண்ணையும் இரவு நேரங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீர்திருத்தச் சிந்தனைகள் பற்றி அவர்கள் வாங்கிய திராவிட நாடு,முரசொலி,முத்தாரம்,கோம்லாண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகை முல்லை ஆகிய தமிழக ஊடகங்களில் வரும் கருத்துக்களை அசை பேபாடுவதும்,சிலாகித்து விதந்துரைப்பதும் அன்றாட நிகழ்வாக இருக்கும்.
அவர்களின் மனதை ஆக்கிரமித்த கருத்துக்களை அவர்கள் விலாவாரியாக கதைக்கும் போது நானும் அதனைக் கிரகித்துக் கொள்வேன்.
ஆனால் நான் படிக்கும் போதே எனது பன்னிரண்டாவது வயதிலேயே திராவிட முன்னேற்றக் கழக வெளியீடுகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.
தான் வாசித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளியீடுகளுடன் கலைமகள்,கல்கி,குமுதம்,ஆனந்த விகடன்,கலைக்கதிர் போன்ற புத்தகங்களை அவர் வரும் போது கொண்டு வந்தும்,சில வேளைகளில் அவற்றைத் தபாலில் அனுப்பி வைப்பதன் மூலமும் எங்களுடைய வீட்டறையின் ஒரு பகுதியில்,எங்களுடைய தந்தையால் ராக்கை அடிக்கப்பட்டு அவை அடுக்கப்பட்டிருந்தன.
தெய்வம் தொழாஅள் என்று தொடங்கும் திருக்குறளுக்கு கருத்துரைத்தவர்களில் சிலரின் கருத்துக்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
மு.வரதராசன் விளக்கம்:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவிஇ பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
கலைஞர் விளக்கம்:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்
மணக்குடவர் விளக்கம்:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய்இ எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதிஇ அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
வீ. முனிசாமி விளக்கம்:
தெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் ‘பெய்’ என்று சொல்ல மழை பெய்யும்.
பரிமேலழகர் விளக்கம்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என – பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் ‘பெய்’ என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின்இ ‘தொழுது எழுவாள்’ என்றார். ‘தொழாநின்று’ என்பதுஇ ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).
கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் மேற்கூறிய திருக்குறளின் கருத்துப் பிழையைச் சுட்டிக்காட்டிய அவரேதான் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு கடல் நடுவே பிரமாண்டமான சிலையையும் தனது ஆட்சிக் காலத்தில் நிறுவினார்.
நாம் ஏற்றுக் கொள்ளுகிற கோட்பாடுகளையோ ,சித்தாந்தங்களையோ அல்லது அரசியல் கொள்கைகளையோ கண்ணை மூடிக் கொண்டே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
அவற்றில் நல்லவற்றை கடைபிடிக்கலாம் மற்றவற்றைத் தவிர்த்துவிடலாம்.இவ்வாறு பகுத்தறியும் தன்மைகள் அறிவார்ந்த சமூகத்தினரிடம் இருக்கின்றன.அவற்றைச் சமூக விழுமியங்களாக,சமூக
மேபாட்டுக்கான அலகுகளாக படிமுறைத் அறிவியல் தட்டுகளாக வளர்ந்த நாடுகளும் வளர்ச்யடைந்த நாடுகளும் கடைப் பிடித்து வருகின்றன.
ஆனால் தமிழர்கள் உட்பட ஒருசில இனங்கள் எதையுமே ஏன் எதற்கு என்றலசல் நோக்கு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால் அவர்களின் போக்கு பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்பதைவிட்டு நகரவே இல்லை.
(தொடரும்…)
![]()