இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுவோரின் பொறுப்புக்கூறல் கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றுள்ளது – ஐ.நா மனித உரிமைகள் சுட்டிக்காட்டு

இலங்கையில் நடைபெற்றுவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரை தேடுவோரின் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை என்பன வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது

அந்தவகையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது.

இக்கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கை தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருக்கின்றது.

அத்தோடு இம்முயற்சிகள் சிவில் சமூக அமைப்புக்கள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லிணக்கப்பொறிமுறை தொடர்பான ஆலோசனை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *