2024 இல் ரணிலின் ஆட்சியில் 14 இசை நிகழ்ச்சிகளுக்கு 323 மில். ரூபா செலவு
முன்னாள் அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு ஸ்மார்ட் யூத் நைட் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 14 இசை நிகழ்ச்சிகளுக்காக 323 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தை அண்மித்த பகுதியில் 22 மில்லியன் ரூபா செலவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி இசை நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டதாகவும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் எரங்க குணசேகர, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக தவறாக பயன்படுத்தியமை கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தேசத்தின் இளைஞர்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் நேரத்தில், இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும் 2024 ஆம் ஆண்டில், அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்மார்ட் யூத் நைட் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அப்போதைய அரசாங்கம் முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
அப்போதைய அரசாங்கம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதுடன், நிகழ்வுகளை நடத்தும் போது டெண்டர் கோரத் தவறியதையும் கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துவதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஸ்மார்ட் யூத் நைட் திட்டம் பற்றிய விரிவான அறிக்கையை நாங்கள் பெற்றோம். 14 இசை நிகழ்ச்சிகளுக்காக 323 மில்லியன் செலவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு செலவளித்த பின்னரே பில்களுக்கு திகதியிடப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தேசத்தின் இளைஞர்களை கட்டியெழுப்புவதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், முன்னாள் அரச தலைவர்களின் பிள்ளைகளை முன்னாள் அரசாங்கத்தின் அரசியல் செயற்திட்டங்களுக்கு ஈர்ப்பதற்காகவே அது பயன்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை தவறாக பயன்படுத்தியமை கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
தணிக்கை அறிக்கை, அனைத்து பரிந்துரைகளுடன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர இந்த வெளிப்பாடு குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் அனைத்து அமைச்சுக்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களிலும் இடம்பெற்ற நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசாரணைப் பிரிவை அமைப்பது குறித்து அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()