கயிறொன்றே இழப்பு!…. கவிதை…. சங்கர சுப்பிரமணியன்

உண்மையைத்தான் சொன்னேன்
உண்மை சுடுமென சொல்வதை கேட்டிருக்கிறேன்
உண்மை சுடுமென இப்போதறிந்தேன்
உண்மை குற்றமுள்ளோர்க்கே சுடுமென
கூற்றையும் உணர்ந்தேன்
குற்றமற்றோர்க்கு சுடாதென என்பதையும் நன்கறிந்தேன்
எப்படி என்று ஏற்புடன் கேட்பீரானால்
ஒன்று சொல்வேன் அனைவருமறிந்ததை
உண்மை சுடாததினால் அரசனவன் அன்று
பெற்ற மகனை தேர்க்காலில் கிடத்தினான்
நீதியை நிலைநாட்டி உண்மையைக்கூற
இங்கே அற்ப செயலுக்கு எல்லாம்
உண்மையை மங்கச் செய்கின்றனரே
அவ்வுண்மையை தூங்கச் செய்கின்றனரே
பூனை அதுவும் கண்ணை மூடுமாம்
பூலோகமே இருண்டதாய் கனவு காணுமாம்
ஆனால் உண்மைதான் ஒளிந்து கொள்ளுமா
இங்கே அதுவும் மிளிர்ந்து தெரிகின்றதே
அணையில் ஓட்டை இல்லாததை ஊரறியும்
ஓட்டையென காட்டுவதையும் நாடறிந்திடும்
தன் நெஞ்சே தன்னைச்சுடும் என்பதுபோல்
வீட்டப்பம் மோட்டைச்சுடும் என்பதறிவோம்
கயிறைக் கட்டி மலையை இழுப்போம்
நகர்ந்தால் மலை நகரட்டும் இன்றேல்
இங்கு நமக்கு கயிறொன்றுதான் இழப்பு
-சங்கர சுப்பிரமணியன்.
![]()