குர்ஆனை அவமதித்ததாக கூறி படுகொலை: பாகிஸ்தானில் பதற்றம் – 27 பேர் கைது
பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில்,புனி அல் குர்ஆனை அவமதித்ததாகக் கூறி, நபரொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் 27 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 340 கிமீ தொலைவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மத்யன் என்ற ஊரில் கடந்த வியாழக்கிழமை (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் மாகாணம் சியால்கோட் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பாகிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
பின்னர் கைபர் பாக்துன்க்வா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள மத்யான் தாலுகாவில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதன்பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்த போது தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பொலிஸ் நிலையத்திற்கு தீ வைத்ததுடன் காவலில் இருந்த சந்தேகநபரையும் வெளியே இழுத்து வந்து உயிரோடு எரித்து கொலை செய்தனர்.
இதன்பின்னர் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதுடன் கூடுதல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



![]()