“தலைவா காப்பாத்து” திகைத்து நின்ற விஜய்; பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்த உத்தரவு
தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய் தனது பங்களிப்பை செலுத்த சரியான நேரம் இதுதான் என முடிவெடுத்து தனது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை களத்தில் இறங்க உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் கொடுத்து 43 பேர் பலியான நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டமே வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளார்.
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 50வது பிறந்தநாள் ஜூன் 22ம் திகதியான இன்று கொண்டாடப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் என்கிற என். ஆனந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவு! தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டாது என்றும் கோட் படத்தின் அப்டேட் மட்டுமே விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காலில் விழுந்து உதவி கோரிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாாகி வருகின்றது.
![]()