நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகளை இடம் மாற்ற எதிர்ப்பு
மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், அந்த சிலைகள் தற்போது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் ஆகியோரின் சிலைகளும் பழைய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற நூலகத்துக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “சத்ரபதி சிவாஜி மகராஜ், மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தின் முதன்மையான இடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இது, கொடுமையானது” என்றார்.
காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், “மகாராஷ்டிர வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் சிவாஜி மற்றும் அம்பேத்கர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று குஜராத்தில் முழு வெற்றியை ஈட்ட முடியவில்லை என்ற விரக்தியில் மகாத்மா காந்தி சிலையையும் அவர்கள் (பாஜக) அகற்றியுள்ளனர். இப்போது சிந்தியுங்கள். அவர்களுக்கு 400 இடங்களை வழங்கியிருந்தால் அரசியலமைப்பை காப்பாற்றியிருப்பார்களா?” என்றார்.
![]()