பலதும் பத்தும்

ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் பரபரப்பு தகவல்

இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள்(Sri Lankan Army) ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், “இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை(Sri Lanka) சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கியூபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஷ்ய – உக்ரைன்(Russia – Ukraine) போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போர்முனை

கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் மூன்றுபேர் அல்லது நான்கு பேரே சேர்க்கப்பட்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே, என்னை ரஷ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர்.

அதற்காக 1.6 மில்லியன் செலுத்தியதாகவும் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது என்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள். நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் இருந்தனர்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என்றும் ரஷ்யாவில் தமிழில் பேசிய ஒருவரே தங்களை வரவேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீசாவுடன் கடவுச்சீட்டு

இதேவேளை கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா வீசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவை ஒருவாரத்திற்குள் கடவுச்சீட்டு வீசாவுடன் கிடைப்பதாக , அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான வீசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என குறித்த முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார்.

இதற்கு, சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் தங்களிற்கு உதவியதாகவும், அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படை உறுப்பினர்

இந்தநிலையில், ரஷ்யா – உக்ரைன் போர்முனையில் இணைந்து கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறிய ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் இன்று (10)  காலை உக்ரேனில் இருந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

நாட்டை வந்தடைந்தவுடன் இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.