இலங்கை

புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் 1800 கோடி ரூபா மோசடி!: சபையில் அம்பலப்படுத்திய சம்பிக்க

“அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் சுமார் 1800 கோடி ரூபா மோசடி செய்யப்படும் என்று மதிப்பிடப்படுகின்றதாக  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka)தெரிவித்துள்ளார்.

ஆகவே, வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் பேசுகையில், “2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 12 சதவீதமாகக் காணப்பட்ட ஏழ்மை தற்போது 26 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இலங்கை வங்கியின் கடன்

பொருளாதாரப் பாதிப்பால் வங்கிக் கட்டமைப்பு மிக மோசாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2023.12.31 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாத்திரம் வங்கிகள் அறவிடாத மொத்தக் கடன் 7387 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.

இது வங்கிக் கடன்களில் 12 சதவீதமாக உள்ளது இந்தியாவில் அறவிடாத வங்கிக் கடன் 6.5 சதவீதமாகவும், பங்களாதேஸில் 8 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 7.3 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

வங்கிக் கட்டமைப்பில் அறவிட முடியாத கடன் 3 சதவீதத்தைக் காட்டிலும் உயர்வடையும்போது அது வங்கிக் கட்டமைப்புக்கு ஆரோக்கியமானதாக அமையாது.

இலங்கை வங்கியின் அறவிடா கடன் 336 பில்லியன் ரூபாவாகவும், மக்கள் வங்கியின் அறவிடா கடன் 280 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுகின்றது.

விசா விவகாரம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகிய அரச நிறுவனங்கள் பெற்றுக்கொண்ட கடன்களை மீள அறிவிடாததால் அரச வங்கிகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இலங்கை வங்கியின் சேவை சங்கத்தினர் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குக்((Ranil Wickremesinghe) கடிதம் எழுதி  இலங்கை வங்கியின் உள்ளக மோசடி மற்றும் அரசியல் தலையீடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தீர்வு கோரிய நபர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, விசா விவகாரம் தற்போது பிரதான பேசுபொருளாகியுள்ளது.

பின்னணியில் இருப்பவர் யார்

2012 ஆம் ஆண்டு முதல் முறையாக நிகழ்நிலை முறைமை ஊடாக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கப்பட்டது.

ஆனால், தற்போது இந்த சேவை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 200 பில்லியன் டொலரை முதலீடு செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.

உண்மையில் அரசுக்கு எவ்வித வருமானமும் இந்தத் திட்டத்தால் கிடைக்கப்போவதில்லை. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் சுமார் 1800 கோடி ரூபா மோசடி செய்யப்படும் என்று மதிப்பிடப்படுகின்றது.

ஆகவே, வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.” – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.