இந்தியா

ஆந்திராவில் சீட் கிடைக்காததால் விரக்தி: தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சூறை

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் மூத்த தலைவரான பிரபாகர் சவுத்ரிக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மேலும் அலுவலகத்தில் இருந்த மர சாமான்கள் பிளக்ஸ் பேனர்கள் துண்டு பிரசுரங்களை ரோட்டில் எடுத்து வந்து கொட்டி தீயிட்டு எரித்தனர். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

படேறு தொகுதியில் சீட் கிடைக்காததால் பிரசாத் என்பவர் அவரது வீட்டில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் போட்டோக்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை சாலையில் போட்டு எரித்தார்.

விஜயநகரம் மாவட்டம் நெல்லிமரலா பங்கர்ராஜுக்கு சீட்டு வழங்காததால் அவர் சுயேசையாக போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல் 8 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.

தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *