பேனா நினைவு சின்னம்: 15 நிபந்தனைகள் விதிப்பு!…
சென்னை மெரினா அருகே, கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க, கடலோர மண்டல மேலாண்மை விதிகளில் ஒப்புதல் வழங்க, 15 புதிய நிபந்தனைகளுடன், வல்லுனர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக, மெரினா கடற்கரையில் கட்டப்படும் நினைவகத்தின் தொடர்ச்சியாக, கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவானது. மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில், இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
கடலோர மண்டல மேலாண்மைக்கான தேசிய ஆணைய உத்தரவுப்படி, விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் கால செயல்திட்டம் தயாரித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு பணிகளை, தமிழக அரசு முடித்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக அரசு அனுப்பிய கோப்புகள்மீது, கடலோர மண்டல மேலாண்மை குழுமத்தின், 14 உறுப்பினர் வல்லுனர் குழு ஏப்., 17ல் ஆய்வு செய்தது. உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலிக்க, 15 நிபந்தனைகளுடன், தேசிய ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பேரிடர் மேலாண்மை திட்டம், போக்குவரத்து மேலாண்மை திட்டம் உள்ளிட்ட சில ஆவணங்களை, மீண்டும் புதிதாக தயாரிக்க வேண்டும். ஆண்டு தோறும், ஜன., முதல் ஏப்., வரை கட்டுமான பணிகளுக்கு தடை போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதில் வழங்கப்படும் ஒப்புதல், பசுமை தீர்ப்பாயம், நீதிமன்ற வழக்குகளில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும், வல்லுனர் குழு பரிந்துரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
![]()