நித்யானந்தாவுக்கு என்ன ஆச்சு? சமாதியில் இருப்பதாக தகவல்!

பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவரும், தன்னை தானே சாமியார் என்று கூறிக் கொள்பவருமான நித்யானந்தா, கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். அதன்பின்னர், தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்து, அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், தன்னை அந்த நாட்டின் பிரதமராக பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்த கைலாசா தீவு தென் அமெரிக்காவின் ஈக்வெடார் அருகே இருப்பதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து, அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து வந்த அவர், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். மேலும், தனது சீடர்களுக்கு சத்சங்கங்களையும் வழங்கி வந்தார். இதனிடையே, அண்மைக்காலமாக அவர் பற்றிய தகவல் வெளி வராமல் இருந்தது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், தான் உயிரிழக்கவில்லை என்று தனது முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்துள்ள நித்யானந்தா, தமது புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார். மேலும், தானே கைப்பட எழுதிய கடிதத்தையும் அதில் அவர் இணைத்துள்ளார். அக்கடிதத்தில், “சிவசிவ திரும்பு வந்துட்டேன்னு சொல்லு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான் சமாதியில் இருக்கிறேன். எனது வெறுப்பாளர்கள் நான் இறந்துவிட்டதாக பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் உயிரிழக்கவில்லை. வேறு எங்கும் செல்லவில்லை. பேசுவதற்கும், சத்சங்களை வழங்குவதற்கும் இப்போதைக்கு இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நேரம் எடுக்கும்.

என்னை சுற்றியுள்ள மக்கள், பெயர்கள், அவர்களின் இருப்பிடம் பற்றிய நினைவுகளை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. கைலாசத்தின் அதிர்வலைகள் என மனநிலையில் இன்னும் உள்ளது. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் போலி என சந்தேகிப்பவர்கள் திருவண்ணாமலை அருணகிரி யோகேஷ்வர சமாதிக்கு சென்று விளக்கு ஏற்றினால் என்னை நீங்கள் தெளிவாக காணலாம்.

என் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மருத்துவ கவனிப்பிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. 27 மருத்துவர்கள் என உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் மருத்துவர்கள் என கூறுவதை காட்டிலும் எனது சீடர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அழைத்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் என்னுடன் இணைந்து மனித உடல் மற்றும் மனதில் உள்ளுணர்வை தாக்கம் பற்றி அறிந்துகொள்வதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

நாள்தோறும் எனது நித்ய சிவ பூஜை மட்டும் தவறாமல் நடைபெறுகிறது. சாப்பிடுவதும், தூங்குவதும் இன்னும் தொடங்கப்படவில்லை. நித்ய பூஜைக்காக நான் சமாதியில் குடியேறும்போது உங்களது கருத்துகளை பார்த்து அதற்கு உரிய பதிலை அளிக்கிறேன். நான் நலம் பெற வேண்டும் என விரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் எனது நன்றிகள்.

எனது உடலில் எந்த நோயும் இல்லை. இது உடலில் வழியாக செயல்படும் காஸ்மோஸ் (மருத்துவர்களால் உடலில் எந்த நோய் அல்லது கோளாறு ) போன்றது. பரமசிவனுக்கு இணையான பிரபஞ்சத்தை அனுபவித்து வருகிறேன். மனிதனாக இருப்பதை விட கைலாசத்தில் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். தேவைப்பட்டால் நிகழ் உலகத்துக்கு நான் மீண்டும் வருவேன். நான் மீண்டும் மனிதனாக வருகை புரிந்து உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற உணரச் செய்த உங்களது அன்புக்கு நன்றிகள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் வழக்கான அவரது புன்னகை மிஸ் ஆகிறது. மேலும், உடல்மெலிந்து காணப்படுகிறார். இதனால், அவருக்கு என்ன ஆயிற்று என்று அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *