இலக்கியச்சோலை
சில மனிதர்களும் சில நியாயங்களும்!… நாவல் …. கரவை மு.தயாளன்.

மனிதன் ஓர் நியாயவாதி அவனா(ளா)ல் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு பிழைகளையோ சங்கடமான விடயங்களையோ செய்துமுடிக்க இயலாது. அதற்கு மனிதன் கையாளும் உத்திதான் தனக்குள் தன்னை நியாயப்படுத்துவது.
எல்லா மனிதர்களும் தம்மை நியாயப்படுத்திக்கொண்டே இன்று மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிக்குப் பதில் சொல்ல முடியாது இங்கு மனிதர்களால் வாழ முடியாது. குறைந்தது தம்மை நியாயப்படுத்திக்கொண்டால்தான் வாழ்வை நகர்த்த முடியும்; வாழ முடியும்.
மேற்படி கரவை மு.தயாளனின் “சில மனிதர்களும் சில நியாயங்களும்”என்ற நாவலும் தத்தமது நியாயப்படுத்தல்கள் மூலம் முரண்பாடுகளோடு வாழும் ஒரு புலம்பெயர்ந்தவர் குடும்ப வாழ்க்கையைக் கையிலெடுத்திருக்கிறது.
இலக்கியங்கள் நமக்குப் பலதைக் கற்றுத் தந்துகொண்டிருக்கின்றன; நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆம் அப்படி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியலைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளக் கூடியதாக “சில மனிதர்களும் சில நியாயங்களும்”காட்சியளிக்கின்றன.
கரவை மு.தயாளனின் இந்நாவல் மூத்தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்குமான வாதங்கள் புரிதல்களாக இணங்கிக்கொள்ளப்படுகிறது என்பதைச் சொல்லிச்செல்வதோடு மகேந்திரத்தின் பக்க நியாயங்களை மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருப்பது சிறப்பு.
வாசகர்களைக் கடினப்பட வைக்காமல் இலகுவாகக் கதையைப் புரிந்துகொள்ளவும் சினப்பட வைக்காமல் புத்தகத்தோடு பயணிக்க வைத்த எழுத்தாளரின் மொழிநடை அழகானது.
நாவலில் தயாளன் அவர்கள் இடை இடையே தன் எண்ணங்களைக் கொட்டிச் செல்வது அவரது அனுபவ முதிர்ச்சியை வெளிக்காட்டுவதோடு வாசகருக்கும் எழுத்தாளருக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறது.
வாசகர்களே! ஆக மொத்தத்தில் கரவை மு.தயாளனின் “சில மனிதர்களும் சில நியாயங்களும்”படைப்பை வாசிக்க உங்கள் பொன்னான நேரங்களை நீங்கள் ஒதுக்கிக்கொள்ளலாம்.
கவிதை எழுதுபவர்களின் நாவல்கள் சிறுகதைகள் மொழிநடை அற்புதமாக இருக்கும். நான் அதைக் கவனித்திருக்கிறேன். நீங்களும் ஒரு எட்டு வாசித்துப் பாருங்கள்.
நல்லதொரு படைப்பு நம்மவரைக் கொண்டாடுங்கள்.
இவண் – பண்டாரவன்னியன் புத்தகசாலை
![]()