கவிதைகள்

புறநிலையை மனமிருத்தி பொறுப்புடனே நடந்திடுவோம்!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

ஆலையிட்ட கரும்பாக அவதியுற்ற மக்களெலாம்

     சாலையெலாம் திறந்ததென்று தாம்மகிழ்வு எய்துகிறார் 

     கோலோச்சும் கொரனோவோ கொன்றொழிக்கும் எண்ணமுடன்

     அடுத்தகட்ட நிலையபற்றி ஆளமாய் நினைக்கிறது !

 

  திறந்துவிட்ட காரணத்தால் திசைமாறிப் போகின்றார்

  நிறுத்திவிட்ட அத்தனையும் நெஞ்சமதில் நிறைக்கின்றார்

  சுயநினைவு இல்லாமல் செய்கின்றார் யாவருமே

  நமைமறந்து இயங்கிவிடில் நம்மியக்கம் மழுங்கிவிடும் !

 

  அளவுடனே நடப்பதால் ஆபத்து எமையணுகா

  அளவுதனை மீறிவிடின் ஆபத்து வீடுவரும்

  அரைகுறையாய் அறிந்துவிட்டு ஆட்டமெலாம் போடுவது

  அரைகுறாய் ஆக்கியெமை அடங்கிவிடச் செய்திடுமே !

 

  விடுதலை கிடைத்ததாய் வெற்றிவிழா நடத்துகிறார்

  வேதனைகள் சோதனைகள் விலகியெங்கும் ஓடவில்லை

  உலகத்தின் ஒருமூலை உணர்விழந்தே கிடக்கிறது

  உணர்விழந்து நாமிருந்தால் ஓலமிடும் நிலைமைவரும் !

 

  வெளிச்சம் வந்துவிட்டதென குதித்தெழுதல் குறைத்திடுவோம்

  சுயவுணர்வை மனமிருத்தி செயற்படநாம் நினைந்திடுவோம்

  அகமதிலே நற்கருத்தை அனைவருமே இருத்திடுவோம்

  புறநிலையை மனமிருத்தி பொறுப்புடனே நடந்திடுவோம் !

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *