படைப்பாளிகள்

கவிஞர் அம்பி!… ( இராமலிங்கம் அம்பிகைபாகர் )

அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் இலங்கையின் வடபுலத்தில் நாவற்குழியூரில் 1929 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி பிறந்தவர்.

1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் வசிக்கிறார்.

தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும், பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்தவர். அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

இலங்கையில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் ( Lake House ) வெளியிடும் தினகரன் இதழில் வெளிவந்த இலட்சியச் சோடி என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.

தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். அச்சமயம் தி.மு.க. பொருளாளராக பதவியிலிருந்த மக்கள் திலகம் எம். ஜி. இராமச்சந்திரன் கவிஞர் அம்பிக்கு தங்கப்பதக்கம் அணிவித்தார்.

தமிழகத்தில் கோமல் சாமிநாதனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சுபமங்களா இதழ் இவரை

ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளை என வர்ணித்தது. கவிஞர் அம்பி, யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பணியாற்றிய வேளையில் அதன் கல்லூரி கீதமும் இயற்றியவராவார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

சிறுவர் இலக்கியத்தை வளம்படுத்துவதற்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகளை எழுதியிருப்பவர்.

கவிஞர் அம்பி தமிழுக்குச் செய்த அரும்பணிகளில் மருத்துவத் தமிழ் முன்னோடி மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தகுந்ததாக கருதப்படுகிறது. மருத்துவர் கிறீன் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியிருக்கும் கவிஞர் அம்பி அவர்களை, இலங்கை அமெரிக்கத் தூதுவராலயமும் அழைத்து பாராட்டு விருந்துபசாரம் நடத்தியுள்ளது.

அமெரிக்கா மசாசூசெட் மாநிலத்தில் அடக்கமாகியிருக்கும் மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களின் கல்லறைக்கும் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கும் அம்பி, குறிப்பிட்ட தமிழ் மருத்துவ முன்னோடியின் பேரனாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்.

கிறீனுக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதற்கும் ஆக்கபூர்வமாக உழைத்தவர்.

இதுவரையில் கவிஞர் அம்பி எழுதி வெளிவந்துள்ள நூல்களின் விபரம்:

· கிறீனின் அடிச்சுவடு ( ஆய்வு )

· அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள் )

.இரண்டு உலகம் கவிதைத் தொடர். ( அக்கினிக்குஞ்சு இதழில் வெளிவந்தது )

· வேதாளம் சொன்ன கதை ( கவிதை நாடகம் )

· கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள் ) கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடு

· அந்தச் சிரிப்பு ( கவிதை நாடகம் )

· யாதும் ஊரே – ஒரு யாத்திரை (பயண இலக்கியம் )

· அம்பி கவிதைகள்

· மருத்துவத் தமிழ் முன்னோடி

· Ambi’s Lingering Memories (Poetry)

· Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green

· உலகளாவிய தமிழர்

· A String of Pearls

· பாலர் பைந்தமிழ்

· Lingering Memories (ஆங்கிலம் மூலம் கற்கும் தமிழ்க்குழந்தைகளுக்கான கவிதை நூல்)

· The World Wide Tamils

· கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள் – வண்ணப்படங்களுடன். ) சென்னை மித்ர வெளியீடு

கவிஞர் அம்பி பெற்ற விருதுகள்

உலகத்தமிழாரராய்ச்சி மாநாட்டு விருது (தங்கப்பதக்கம், 1968)

· இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’ (1993)

· கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது (1994)

· அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது (1997)

· கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது (தங்கப்பதக்கம், 1998)

· அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது (2004 கன்பரா)

· அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு இணை இதழின் வாழ்நாள் சாதனையாளர் விருது ( 2019)

இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள் முகப்பில் கவிஞர் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி கௌரவித்துள்ளன.

2019 ஆம் ஆண்டு அம்பியின் 90 அகவையை முன்னிட்டு புகலிடத்தமிழ் அன்பர்களினால் பெரு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவிலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் கவிஞர் அம்பி அகவை 90 என்னும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

எழுத்தாளர் முருகபூபதி எழுதிய கவிஞர் அம்பி வாழ்வும் பணியும் என்னும் நூல் 2004 ஆம் ஆண்டு அம்பியின் பவளவிழாக்காலத்தில் வெளிவந்துள்ளது.

கவிஞர் அம்பி எழுதிய இரண்டு உலகம் என்ற நீண்ட கவிதைத் தொடர் அவுஸ்திரேலியாவிலிருந்து அக்கினிக்குஞ்சு இதழ் அச்சுப்பிரதியாக வெளியானபோது பதிவேற்றம் பெற்றுள்ளது.

கவிஞர் அம்பி தமது 92 வயது பருவத்தில் சொல்லாத கதைகள் என்னும் தனது வாழ்க்கைச்சரிதத் தொடரை எழுதிவருகிறார்.

———-00————–

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.