ஜோர்டான், பஹ்ரைன் நோக்கிச் சென்ற ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய பிரித்தானியா

ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் நோக்கிச் சென்ற இரண்டு ட்ரோன்கள் பிரித்தானிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
ரோயல் விமானப்படைக்கு சொந்தமான டைபூன் ஜெட் விமானங்களால் இந்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில், பிரித்தானிய போர் விமானங்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு ஆதரவாக தற்காப்பு ரோந்துகளை மேற்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் ட்ரோன்களை எமது படையினர் இடைமறித்துள்ளதாகவும் ஜோன் ஹீலி கூறியுள்ளார்.
இந்தப் பணியின் போது ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் நோக்கிச் சென்ற இரண்டு ட்ரோன்களே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிராந்தியத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் ரோயல் விமானப்படையின் செயல்பாட்டு நிபுணர்களை தற்போது நியமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பிராந்திய இராணுவ மற்றும் பொது வான்வெளியை ஒருங்கிணைக்க உதவுவதாக கூறியுள்ள பாதுகாப்பு செயலாளர் ஜோன்ஹீலி, ஈரானிய ஏவுகணைகள் தங்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பு அவற்றை அழிக்கும் நோக்கில், “ஈரானுக்கு எதிரான குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைகள்” முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு இங்கிலாந்தில் உள்ள RAF தளத்தையும், இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளத்தையும் பயன்படுத்த அமெரிக்காவிற்கு எமது அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் ஜோன் ஹீலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
![]()