“தொடர்ந்தால் உயிர் ஏதும் தப்பாது”…. கவிதை… சோலச்சி

நீண்ட காலம் எதுவும் நிலைப்பதில்லை
ஆம்.! கல்வியைத் தவிர..
மண் மணம் மாறும்
நிறமும் மாறும்.!
நீர் கூட
ஓடிக்கொண்டே இருக்கும்
உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கும்..
காற்றும் புதிது புதிதாய்..
நெருப்பு சுடும்
நீர் பட்டால் உயிர் விடும்..!
அடடா.. இந்த உண்மை உணர்ந்தும்
ஆதிக்கமும் அடக்குமுறையும் மேலோங்குது
அந்நிய நாட்டில் மூக்கு நுழைக்குது..!
கொத்துக்கொத்தாய் குண்டு மழை – எதைக்
கொண்டு போக இவ்வளவு விலை.?
குழந்தைகள் செத்து மடிவதும்
குருதி ஆறாய் ஓடுவதும்
தொடர்கதையாகுதே இப்போது
தொடர்ந்தால் உயிர் ஏதும் தப்பாது…?
ஆண்டவனாலும் ஆள்பவனாலும் யுத்தம் நடக்குது
அன்றாடம் எங்கோர் மூலையில்
அணுகுண்டு வெடிக்குது..!
கொன்று விட்டு கொள்வது எதை
கொடூர செயலை காலில் உதை..!
பாட்டுச் சத்தம் காதுக்கு இனிக்கும்
பாரில் யுத்தம் பரம்பரையை அழிக்கும்
சுதந்திரமாய் காற்றை உலாவ விடு
சூரியோதயம் பொதுவானது வழி விடு.!

சோலச்சி
![]()