உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பென்றால் சலேயின் பின்னால் இருந்த சக்தி எது?; இது சஹ்ரான்கள் தனியாகச் செய்த விடயமும் அல்ல

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்புபட்டிருக்கின்றார் என்றால் அவரின் பின்னால் இருந்த சக்தி எதுவொன்று கண்டுபிடிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போதே ராஜித சேனாரட்ன இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதின் பின்னால் மறைமுக சக்தியொன்று இருந்தது என்பதே நம் அனைவரினதும் சந்தேகமாகும். இது சஹ்ரான்கள் தனியாக செய்த விடயம் அல்ல. முதலாவதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டது. பின்னர் அது சஹரான்கள் செய்த வேலை என்று தெரியவந்தது. இந்நிலையில் முதலில் அதனை விடுதலைப் புலிகள் செய்தது என்று பிரசாரங்களை கொண்டு சென்றவர்கள் யார்? முற்றிலும் உண்மைகளை மறைக்கவே விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டது.
எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை அவசியமாகும். இப்போது செய்ய முடியாமல் சலேயை கைது செய்துள்ளனர். ஆனால் மற்றையதை போன்று இது கண்காட்சியென்றால் எந்த பலனும் கிடையாது. முறையாக விசாரணை நடத்தி உண்மையில் இதன் பின்னால் மறைமுக சக்தியொன்று இருந்ததா? இல்லையா? என்று கண்டுபிடிக்க வேண்டும்.
சலே இதனுடன் தொடர்புபட்டிருந்தால் அவருக்கு அதற்கான காரணம் இருக்க வேண்டும். ஆனால் அவர் தொடர்புபட்டுள்ளார் என்று குற்றவாளியென்று கூற முடியாது. ஆனால் சலே இதில் தொடர்புபட்டிருந்தால் அவரின் தனிப்பட்ட நோக்கத்திற்காக செய்திருக்க முடியாது,அவரின் பின்னால் இருந்த சக்தி எதுவொன்று கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
![]()