இலங்கை

இந்தியாவில் மாகாணசபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை

இந்திய விஜயத்தின்போது அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இந்திய தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இந்திய வெளிவிவகார அமைச்சர், குஜராத் மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களை தாம் சந்தித்ததாகவும் அதன்போது மாகாணசபை உள்ளிட்ட அரசியல் விடயங்கள் தொடர்பாக பேசவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தமது கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனை நடத்தும் நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், இந்திய தரப்பிலிருந்து இது தொடர்பாக எவ்வித நினைவூட்டல்களும் செய்யப்படவில்லை. எமது கலந்துரையாடல்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே அமைந்திருந்தன.

தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதார முன்னேற்றமே முதன்மையானது என்பதால் அதற்கான ஒத்துழைப்பு வழங்குவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது. அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ளவர்களே இந்த விஜயத்தின் பின்னணியில் இரகசிய ஒப்பந்தங்கள் இருப்பதாக கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறான இரகசிய உடன்படிக்கைகள் எதுவுமில்லை. எமது இந்திய விஜயம் முழுக்க முழுக்க நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை நோக்கமாகக் கொண்டது” என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *