மக்கள் ஏற்காத சட்டங்களை அவர்கள் மீது திணிக்கமாட்டோம்! நீதி அமைச்சர் திட்டவட்டம்

புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அவ்வரைவு மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
‘மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். புதிய சட்டங்களை உருவாக்கி, எமது ஆட்சிக்காலத்தில் நாம் இத்தனை சட்டங்களை உருவாக்கினோம் எனப் பெருமிதம் கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு இல்லை.
மாறாக எந்தவொரு சட்டம் உருவாக்கப்பட்டாலும், நாட்டுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்படும். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வெளியிட்டு, அதுகுறித்த அபிப்பிராயங்களைப் பெற்றிருக்கிறோம்.
அவற்றின் அடிப்படையில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அவ்வரைவு மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.
மேலும் நாம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவோம் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவோம். ஆனால் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத்தாக்குதல் போன்ற சம்பவங்கள் எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல.
அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், பயங்கரவாத செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ‘பயங்கரவாதம்’ எனும் பதம் மிகவும் குறிப்பாக வரையறை செய்யப்பட்ட, சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறான சட்டமொன்று அவசியமாகும்.
மாறாக புதிய சட்டத்தைக் கொண்டுவந்து எந்தவொரு தரப்பினரையும் ஒடுக்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. பொதுமக்களின் சுதந்திரம் எப்போதும் பேணப்படும் என்றார்.
![]()