இலங்கை

தேர்தலை நடத்தாமல் ஆளுநர் தலைமையில் நிழல் மாகாண சபையை உருவாக்க அரசு முயற்சி!

மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல் மாகாண சபைகளின் அமைச்சுக்களை உருவாக்கி நிழல் மாகாண சபை முறைமையை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும். இவ்வாறு அரசியலமைப்பில் இல்லாத விடயத்தை செயற்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அடைக்கலநாதன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

உணவுப் பொருட்கள் நிர்ணய விலையில் எங்கேயும் விற்பனை செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் இந்த விடயத்தில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரச அதிபர்கள் கவனிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் மக்கள் நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை எமது புகையிரத போக்குவரத்து நிலையில்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக இரவு நேர மன்னார் புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கம் மிக மோசமான விடயத்தை செய்ய முயற்சிக்கின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல், மாகாண சபை நிழல் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் இடமளிக்க முடியாது. மாகாண சபைகளின் அமைச்சுக்களை உருவாக்கி, ஆளுநர் தலைமையில் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கம் போன்று நடத்தும் வகையில் அரசியலமைப்பில் இல்லாத விடயத்தை செய்வதற்கு அரசாங்கம் செய்ய நினைக்ககின்றது. இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாத முறையே. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை நிறுத்தி மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *