தாக்கினால் பதிலடி கொடுப்போம்; இது அரசியல் போர்! – அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை

அரசியலில் சித்தாந்த ரீதியாகத் தம்மைத் தாக்க முற்படுபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கப்படும் என வேளாண்மை, நிலம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த ஆவேசமான கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் லால்காந்த இது குறித்து மேலும் விளக்குகையில்:
நாங்கள் அரசியல் செய்கிறோம். அரசியல் என்பது ஒரு போர், ஒரு தொடர்ச்சியான போராட்டம். சர்வதேச அரசியலை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்கிறது, ஈரான் அதற்குப் பதிலடி கொடுப்போம் என்கிறது. இதுதான் அரசியலின் வழிமுறை.
அப்பாவி மக்கள் அல்லது தமது தரப்பு சித்தாந்த ரீதியாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால், அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது எனத் தெரிவித்தார்.
நாங்கள் தாக்கப்பட்டால், பதிலுக்குத் தாக்க வேண்டும். அது எமது உரிமை. தாக்குதலும் பதிலடியும் இல்லாமல் அரசியல் இருக்க முடியாது. இது அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. இது அரசியலின் இயல்பு, எனவே இதனை ஒரு கேள்வியாக மாற்ற வேண்டாம்.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் மற்றும் மகா சங்கத்தினரின் எதிர்ப்புப் போராட்ட அறிவிப்புகளுக்கு மத்தியில் (முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் அறிவிப்பு போன்றவை), அமைச்சரின் இந்த “தாக்கினால் தாக்குவோம்” என்ற அறிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
![]()