தமிழரசுக் கட்சியை ‘கொழும்பு மைய’ அரசியலிடமிருந்து காப்பவர் சிறீதரனே; ஆய்வாளர் யோதிலிங்கம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய உட்கட்சி மோதல்கள் மற்றும் பாராளுமன்றக் குழுத் தலைவர் மாற்றங்கள் குறித்து அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
சிறீதரன் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது முறையான அரசியல் குழுத் தீர்மானம் இன்றி, சுமந்திரனின் தன்னிச்சையான முடிவாகவே தெரிகிறது. நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள கட்சியின் தற்போதைய கட்டமைப்புகளுக்கு இத்தகைய முடிவுகளை எடுக்க தார்மீக அதிகாரம் இல்லை.
சிறீதரன் நீக்கப்பட்டதன் பின்னணியில் இராணுவத் தளபதிக்கு வாக்களித்த விவகாரம் ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. உண்மையான காரணம், சுமந்திரன் முன்னெடுக்கும் ‘கொழும்பு நலன்சார்’ அரசியலுக்கு சிறீதரன் தடையாக இருப்பதே ஆகும்.
புதிதாக நியமிக்கப்பட்ட சாணக்கியன் தமிழ்த் தேசிய உணர்வுகளுக்குப் புறம்பானவர் என்றும், அவர் தென்னிலங்கை அரசியலை மையமாகக் கொண்டவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவரது நியமனம் பாராளுமன்றத்தை ஒரு தமிழ்த் தேசிய மேடையாகப் பயன்படுத்துவதைச் சிதைத்துவிடும்.
உட்கட்சிப் பிரச்சனைகளை விட இது தமிழ்த் தேசியத்தின் இருப்பு சார்ந்த பிரச்சினையாகும். எனவே, சிறீதரன் மீதான குற்றச்சாட்டுகளை சுமந்திரன் போன்றவர்கள் விசாரிக்க அருகதை இல்லை, மக்கள் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
சுமந்திரனின் அணுகுமுறையால் தமிழ்த் தேசிய சக்திகள் சிதறடிக்கப்படுகின்றன. சிறீதரன் கட்சிக்குள் இருந்து போராட வேண்டுமா அல்லது புதிய அணியாக வெளியேற வேண்டுமா என்பது குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், சிவில் அமைப்புகள் இதில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும்.
தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க மக்கள் திரட்சி அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
![]()