கவிதைகள்
தடம் புரண்டிருக்க வாய்ப்புண்டா?…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

மலைமீது ஏறு மால்மருகனை பாடு
சிலையாய் நிற்பவன் அருள்வான்
குறை ஒன்றும் இல்லை என் குமரா
நிறை கண்டால் போதும் என் வேலா
மால் வாழ்ந்த காலம்தான் எப்போது
மருகன் வாழ்ந்த காலமும் எப்போது
தோலணிந்த சிவன் காலம் எப்போது
நாலுமறிய முயன்றால் அதில் தப்பேது
வள்ளியை மணந்தவன்தான் வேலவன்
துள்ளியே காணி திருத்தியவன் அவன்
பச்சையாக பயிர் செழிக்க வைத்தவன்
இச்சை வள்ளியை உருவகமாக்கினான்
ஒருவனுக்கு ஒருத்தி என்பது பண்பாடு
இருவரை இல்லாளாக்கியது எவ்வாறு
இதெல்லாம் இங்கு யார் செய்த ஏற்பாடு
எதுவும் அறியாமல் ஆக்கியது பயன்பாடு
உலகுக்கு மறைதந்தான் திருவள்ளுவன்
தமிழ்மரபில் இல்வாழ்க்கை இயம்பினான்
முன் ஏர் செல்லும் வழி பின் ஏர் செல்லும்
முன் ஏர் தடம் புரண்டிருக்க வாய்ப்புண்டா!

![]()