கவிதைகள்
போதுமென்ற மனம் கொள்!… கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

(எழு சீர் குறள்வெண் செந்துறை)
மனத்தினைச் சிதற விட்டிடின் அதுவும்
மானையும் வென்றுமே ஓடும்,
மனத்தினைக் கட்டி வைத்திடின் வாழ்வும்
மகிழ்ச்சியாய் இருக்குமே உணர்வாய்! (1)
உனக்கென வேண்டும் செல்வமும் சேர்த்தே
உள்ளமும் நிறைவினைப் பெறுவாய்
எனக்குமே இன்னும் வேண்டுமே என்றோர்
எல்லைதான் மீறலைத் தவிர்ப்பாய்! (2)
அடுத்தவர் உயர்வை அளவெனக் கொள்ளும்
அளவிலா விருப்பமும் அழிப்பாய்!
கொடுத்தநம் இறைவன் அறிந்துமே அளித்தான்
கொண்டிடு மனத்தினில் நிறைவே! (3)
உனக்கென உரிய செல்வமும் வந்தே
உன்னையே அடைந்திடும் அறிவாய்!
மனத்தினில் விருப்பம் பெருகவே விடாது
மகிழ்வுடன் வாழ்கவே என்றும்! (4)
போதுமே என்ற மனத்தினை வளர்த்தே
பொன்னென வாழ்வினைப் பெறுவோம்!
ஏதுமே இலாத ஏழைகள் நலம்தான்
இங்குமே பெற்றிட உழைப்போம்! (5)

![]()