இலங்கை

அடிப்படை உரிமை மனுத் தாக்கல்; விரைவில் நீதிமன்றில் கோட்டா நிறுத்தப்படுவார்

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி ‘அரகலய’ போராட்டத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச் சட்டவிரோதமான முறையில் இழப்பீடு பெற்ற முன்னாள் அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறுமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு இது தொடர்பான அறிவித்தல் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுக்கேதன்ன ஆகியோருக்கு இந்த அறிவித்தலை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கும் இந்த வழக்கிற்குரிய அறிவித்தலை வழங்குமாறு உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *