இலங்கை

வெளிநாடுகளிலுள்ள பல முக்கிய குற்றவாளிகள் சரணடையத் தயார்!

வெளிநாடுகளில் இருக்கும் பல முக்கிய குற்றவாளிகள் தாம் சரணடையத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இலங்கையில் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகளால், சர்வதேச ரீதியில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

இதன் விளைவாக, வெளிநாடுகளில் இருக்கும் பல முக்கிய குற்றவாளிகள் தாம் சரணடையத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இந்த முக்கிய தகவலை வெளியிட்டார்.

அரசாங்கம் சர்வதேச அளவில் ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) வழிமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளதால், இனி தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்தே குற்றவாளிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கின் மூலம் இந்த குற்றப் பின்னணிகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தகைய பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் தடையின்றி மேல்மட்டத் தலைவர்களைக் குறிவைத்துச் செயல்படுகின்றனர்.

நாடு தழுவிய ரீதியில் தேசிய கொள்கைக் குழு முதல் கிராமிய மட்டத்திலான பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் வரை அனைத்தும் முழுமையாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவை இனி நேரடி அமுலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும்.

போதைப்பொருள் விநியோகச் சங்கிலியின் அடிமட்டத்தை மட்டும் தாக்காமல், வெளிநாடுகளில் இருந்து அதனை இயக்கும் ‘உச்சக்கட்டத் தலைவர்களை’ இலக்கு வைத்து சர்வதேச ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *