கவிதைகள்
தென்றல் வந்து வீசாதோ!… கவிதை… ஜெயராமசர்மா

தென்றல் வந்து வீசாதோ
சிந்தை மகிழ்ந் தாடாதோ
நொந்த மனம் மாறாதோ
நோய் நொடிகள் ஓடாதோ
கந்த னருள் சேராதோ
கர்ம வினை போகாதோ
சந்ததும் நம் வாழ்வில்
தென்றல் வந்து வீசாதோ
சொந்த மெலாம் சேராரோ
சுமை யகன்று போகாதோ
வெந்த மனம் மாறாதோ
வினை யகன்று போகாதோ

பந்த பாசம் பெருகாதோ
பழைய நிலை மாறாதோ
செந் தணலும் தணியாதோ
தென்றல் வந்து வீசாதோ
ஆறா வடு மாறாதோ
அகங் குளிர மாட்டாதோ
கோணா முகம் இருக்காதோ
கொள் முதலும் பெருகாதோ
தேனாய் சொல்லும் பெருகாதோ
சிந்தை யன்பு நிறையாதோ
தானாய் மனந் தெளியாதோ
தயாள குணம் அமையாதோ
தென்றல் வந்து வீசாதோ
சிந்தை சிந்து பாடாதோ
சந்ததும் கந்தன் புகழ்
எண்ணி மனம் பாடாதோ !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()