இலங்கை

நம்பிக்கையில்லா பிரேரணை; அரசிற்குள்ளிருக்கும் பிளவை நீக்கி விடும்; விமல் வீரவன்ச கூறுகிறார்

பிரதமர் ஹரிணி தொடர்பில் அரசாங்கத்திற்குள் பிரிவடைந்த நிலைப்பாடொன்று உள்ளது இந்த நேரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதால் பிரிவடைந்த நிலைப்பாடுகள் மறைக்கப்பட்டு அவர்கள் ஒன்றாக இருப்பதை போன்றே நிலைப்பாடுகளே வெளிப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனது கட்சி அலவலகத்தில் நேற்ற புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே வீரவன்ச இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை காலம் தாழ்த்தியாவது மீளப் பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம். கல்வி மறுசீரமைப்பு இலவச கல்விக்கு பாதிப்பு இல்லாதவாறு அமைய வேண்டும். கல்வி மறுசீரமைப்பில் பொருத்தமில்லாத விடயங்கள் உள்ளடங்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. எதனையும் கொண்டு வருவதற்கு முன்னர் அது தொடர்பில் எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் புரிந்துகொள்ள வேண்டும். எதனையும் கருத்திற்கொள்ளாது யார் எதிர்த்தாலும் முன்னெடுப்போம் என்று கூறினர். ஆனால் இறுதி நேரத்தில் அதில் பின்வாங்க நேரிட்டுள்ளது.

இதேவேளை கல்வி மறுசீரமைப்புக்கென கூறி இதுவரையில் செலவிடப்பட்ட பணம் ஆற்றில் போடப்பட்டது போன்று ஆகிவிட்டது. இறுதியில் 6ஆம் தரத்திற்கு பழைய பாடத்திட்டதின் கீழ் பாடங்களை படிக்க வேண்டியேற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே திட்டமிட்டு செய்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டிருக்காது. ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். 2027ஆம் ஆண்டில் இதனை கொண்டு வரும் போதாவது சரியானதை கொண்டு வாருங்கள்.

நாங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது கல்வி மறுசீரமைப்பை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் மற்றும் கல்வி அமைச்சரை பதவி விலக்குமாறுமே கோரினோம். ஒருபோதும் பிரதமரை பதவி விலக்குமாறு கூறவில்லை. இப்போது கல்வி மறுசீரமைப்பு நீக்கப்பட்டுள்ளது. இனி அவர் கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் முடியுமென்ற விடயம் எதுவுமில்லை.

ஹரிணி தொடர்பில் அரசாங்கத்திற்குள் பிரிவடைந்த நிலைப்பாடொன்று உள்ளது. இந்த நேரத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதன் ஊடாக அந்த நிலைபாடு வெளியில் தெரியாமல் ஒன்றிணைந்த நிலைப்பாடே வெளியில் தெரியாது. ஏற்பட்ட பிரச்சினை சபைக்குள் தீர்த்துக்கொள்ளக்கூடியது அல்ல. வீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டியது. நாங்கள் அவ்வாறுதான் செய்தோம். எங்களுடைய பிரதான கோரிக்கையாக கல்வி மறுசீரமைப்பை மீளக்கொள்வதாகவே இருந்தது. அதன்படி நடந்துள்ளது. மீண்டும் இவ்வாறு நடந்தால் எமது போராட்டத்தை தொடருவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *