உலகம்

வெனிசுவேலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஐ.நா தலைவர் கடும் எச்சரிக்கை

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச கவனம் அங்கு குவிந்துள்ள நிலையில், ஐ.நா சாசனத்தைக் கடைப்பிடிப்பது என்பது கட்டாயமானது, அது ஒரு விருப்பத்தேர்வு அல்ல என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அன்னலெனா பேர்பக் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமைதியான நேரங்களிலும் சரி, நெருக்கடி காலங்களிலும் சரி, ஐ.நா சாசனம் சர்வதேச நடத்தைக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை உச்சத்தை எட்டியுள்ள இந்தச் சூழலைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐ.நா சாசனம் என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல – அது அமைதி மற்றும் நெருக்கடி காலங்களில் நமது வழிகாட்டும் கட்டமைப்பாகும், இன்று வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை உச்சத்தை எட்டியுள்ள சூழலிலும் அதுவே பொருந்தும்,” என்று பேர்பக் கூறினார்.

ஐ.நா சாசனத்தின் 2ஆவது பிரிவின்படி, அனைத்து உறுப்பு நாடுகளும் மற்றுமொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக மிரட்டல் விடுப்பதையோ அல்லது பலத்தைப் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“வலிமை உடையவனே நீதியாளன் (Might makes right) என்ற கொள்கைக்குப் பதிலாகச் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டால் மட்டுமே, அனைவருக்கும் அமைதியான, பாதுகாப்பான மற்றும் நீதியான உலகம் சாத்தியமாகும்,” என்று அவர் கூறினார்.

மேலும், வெனிசுவேலா மக்களின் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மனித உரிமை மீறல்களைத் தாண்டி உரிமைகள் நிலைநாட்டப்பட்டால் மட்டுமே நிரந்தர அமைதி சாத்தியம் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *