உலகம்

அமெரிக்க ராணுவத் தாக்குதலில் வெனிசுவேலாவில் 40 பேர் பலி

வெனிசுவேலா நாட்டில் புகுந்து அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலா நாட்டில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திடம் பேசும்போது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் மீது (03) நள்ளிரவு திடீர் தாக்குதலைத் தொடர்ந்துள்ளார்.

வெனிசுவேலாவின் தலைநகர் கராகாஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்தார். எனினும், மதுரோ மற்றும் அவரின் மனைவி உயிருடன் இருப்பதை வெனிசுவேலா அறிய விரும்புவதாக துணை அதிபர் அறிவித்திருந்தார்.

இதன் பிறகு, மதுரோ கைது செய்யப்பட்டு கண்கள், காதுகள் மூடியவாறு அழைத்துச்செல்லப்படும் புகைப்படத்தையும் டிரம்ப் பகிர்ந்திருந்தார். இதன் பிறகே மதுரோ உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவை கடத்திச்செல்லப்பட்ட விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் மதுரோவையும் அவரின் மனைவியையும் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விரைவில் அமெரிக்காவின் நீதி விசாரணைக்கு மதுரோ முன்னிருத்தப்படுவார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் சர்வதேச விதிகளுக்கு புறம்பாக அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தி, அதிபரைக் கடத்திச் சென்றதற்கு வடகொரியா, மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், வெனிசுவேலாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து அந்நாட்டு மூத்த அதிகாரி பேசுகையில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *