தொலைபேசியில் பேசிய ரணில்- சஜித்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.
தொலைபேசி ஊடாக சஜித் பிரேமதாசவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அவருடன் சிறிது நேரம் உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக சஜித் பிரேமதாச தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூவரும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அன்றைய தினம் இரவு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது உறுதியானது என்றும், இருதரப்பும் ஒன்றிணைந்த தெற்கில் புதிய அரசியல் அணியொன்று உதயமாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலைமையில் சஜித் பிரேமதாசவுடன் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் நடத்தியுள்ள உரையாடல் இந்த வருடத்தில் தெற்கு அரசியலில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.
![]()