இலங்கை

ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது!; முக்கிய நபர்கள் கைது

சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஒடிசா மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை வரை பெரிய அளவிலான நடவடிக்கையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆந்திரா-ஒடிசா எல்லையில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட உயர்தர ஷீலாவதி வகை கஞ்சாவை கடத்துவதில் இந்தக் கும்பல் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் விஜயநகர மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான காடே ரேணுகாவும் ஒருவர். வலையமைப்பின் மீதான அவரது விரிவான கட்டுப்பாட்டிற்காக பொலிஸாரினால் “பெண் டான்” என்று விவரிக்கப்படுகிறார்.

ரேணுகா பயகராவ்பேட்டை, நர்சிப்பட்டினம், சலூரு மற்றும் பெங்களூரு முழுவதும் கஞ்சாவை சேமித்து விநியோகிக்க வீடுகளை வாடகைக்கு எடுத்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவரும் அவரது கூட்டாளியான சூர்யா காளிதாஸும் நர்சிப்பட்டினத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீட்டை தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்பும் சரக்குகளுக்கான மையமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் ஒய். தாரகேஸ்வர ராவ் மற்றும் நாதவரம் துணை ஆய்வாளர் ஆகியோர், ஸ்ருகவரம் கிராமத்திற்கு அருகே சந்தேக நபர்களை தடுத்து நிறுத்தி, 74 கிலோ உலர் கஞ்சா, ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல மொபைல் போன்களை பறிமுதல் செய்ததை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேணுகா, ஒடிசாவின் பாலிமேலா மற்றும் சித்ரகொண்டாவிலிருந்து சுமார் 5,000 ரூபா விலையில் ஒரு கிலோ கஞ்சாவை பெற்று, இடைத்தரகர் அடூரி பிரசாத்தின் உதவியுடன் ஒரு அதிநவீன விநியோகச் சங்கிலியை உருவாக்கியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

ஓட்டுநர்கள் மதன் குமார் மற்றும் நாக முத்து ஆகியோர் ராஜநகரம் நெடுஞ்சாலை சந்திப்புக்கு சரக்குகளை கொண்டு சென்றனர், அங்கிருந்து அவர்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு இலங்கைக்கு கடத்தியுள்ளனர்.

இந்தக் கும்பல் உள்ளூரில் சிறிய பாக்கெட்டுகளிலும் கஞ்சாவை விற்பனை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வலையமைப்பின் முழு அளவையும் வெளிக்கொணரவும், எல்லை தாண்டிய கடத்தல் மோசடியில் ஈடுபட்டுள்ள பிற செயல்பாட்டாளர்களை அடையாளம் காணவும் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *