தமிழக மீனவர்கள் கைதாவதை உடன் தடுத்து நிறுத்துங்கள்; ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 27ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் நேற்று (28) கைது செய்த மற்றொரு சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தமிழக மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவது கவலையளிக்கிறது. இக்கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இது போன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
![]()