இலங்கை

ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது 

தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச சமூகம் ஜெனிவாவில் இலங்கை அரசின் கருத்துருவாக்கத்தினை நிராகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது . இங்கு இனப் பிரச்சினை இருப்பதாகவும் இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுமே அதன் சாராம்சம்.

இலங்கை அரசாங்கம் இங்கு பயங்கரவாத பிரச்சினையே உள்ளதென சொன்ன போது சர்வதேச சமூகம் இல்லை, விடுதலைப் புலிகளின் போராட்டம் 70களில் தான் ஆரம்பித்தது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை என்பது 48 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தது என்பதை தெரிவித்தது.

தமிழ் மக்கள் இலங்கையில் உருவாக்கப்பட்ட எந்த அரசியலமைப்பையும் ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகள், உரிமைகள் அரசியலமைப்பில் நிராகரிக்கப்படுகின்றன என்று சொன்னால் இங்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்பதே அர்த்தம்.

எந்த ஒரு நாட்டிலும் ஒரு இனம் அந்த நாட்டின் அரசியலமைப்பை நிராகரித்தால் அங்கு இனப் பிரச்சினை உள்ளது என்பதே அர்த்தம். பிரித்தானியாவில் ஐரிஸ் மக்கள் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு இனப் பிரச்சினை இருந்தது. அந்த அரசியலமைப்பை அங்கு திருத்தம் செய்து இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அரசியல் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தான்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தெளிவாக பதிவு செய்யப்படுகிறது.தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய வல்லமையை சர்வதேசம் வழங்குகிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் வெளிநாடுகள், சர்வதேசம் பெரிய அளவில் இங்கு முதலீடு செய்ய விரும்பாது.

இனப்பிரச்சினை திரும்பவும் வந்து வெடிக்கும். ஸ்திரத்தன்மை இன்றி குழம்பும் என்ற நிலை உள்ளது.முதலீடு செய்வதாக இருந்தால் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலைமை வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கூட புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட பேச்சுக்காகவாவது புதிய அரசியலமைப்பை கொண்டு வரப் போவதாக சொல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறான பின்ணணியில் இந்தியாவினுடைய பங்கு மிக மிக முக்கியம். அயல்நாடு. அயல் வல்லரசு. அந்த நாட்டினுடைய கருத்துக்களை மீறி மற்ற நாடுகள் இலகுவில் ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள்.எதிரி நாடுகள் இந்தியாவை மீறி செயற்படலாம். ஒத்துப் போகக் கூடிய மேற்கு நாடுகள் இந்தியாவுடன் ஒத்துப் போகவே விரும்புவார்கள்.

இந்தியாவை தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டுக்குள் உறுதியாகக் கொண்டு வருவது முக்கியம்.இந்திய -இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதே தமிழ் மக்களுக்காகத் தான். அதற்கு இந்தியாவுக்கும் கடமை இருக்கிறது.அவ்வாறான நிலையில் இந்தியாவிடம் எதைக் கேட்பது என்பது முக்கியம்?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு மட்டுமே தமிழின பிரச்சினைக்குத் தீர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திய போது ஏனைய கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பன மாகாண சபை தேர்தலை நடத்துவதும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவது மட்டுமே தேவை என வலியுறுத்தின.

விசேடமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், 13ஆம் திருத்தம் இந்தியாவின் பிள்ளை. அதனை இந்தியா கைவிட விரும்பாது. 13ஆம் திருத்தத்தை நீக்குவதை விரும்பவில்லை. இலங்கை அரசு 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் நீக்க விரும்புகிறது. இந்தியா கொண்டு வந்த திருத்தம் என்றபடியால் 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் வைத்திருப்பது தான் அவசியம் என்ற அடிப்படையில் தான் பேசினார்.

13ஆம் திருத்தத்திற்குள் இருக்கக்கூடிய அம்சங்கள் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அதில் உள்ள அதிகாரங்கள் உண்மையில் அனுபவிப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறைக்குள் 13 ஆம் திருத்தம் முடக்கப்பட்டிருக்கிற வரைக்கும் தமிழ் மக்களுக்கு அதனை அனுபவிக்க முடியாது.

இதனை உயர்நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது..

இதற்கு பின்னரும் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருவது, அதில் ஏதோ இருக்கிறது. அதனால் அரசாங்கம் மறுத்து வருகின்றது என்ற பொய்யை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே இது நடக்கின்றது என்பதை தெளிவாக கூறுகின்றோம்.

13 ஆம் திருத்தம்தான் தீர்வு என இவர்கள் தேர்தல் காலத்தில் சொல்லி இருந்தால் மக்கள் தக்க பதிலை வழங்கியிருப்பார்கள். தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சொல்கின்ற சமஷ்டி ஆட்சியை விட தீவிர தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு 16 வருடங்களாக வாக்குகளைப் பெறுகின்றார்கள்.

மிக முக்கியமான சந்திப்பில் சமஷ்டியை வலியுறுத்தாமல் மாகாண சபை தான் வேண்டும் எனச் சொல்வது, தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைக்கு நேர் மாறானது. அதனை நிராகரித்து துரோகம் செய்கின்ற வகையில் தான் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.

இதை 2009 ஆம் ஆண்டு நாம் மக்களுக்கு சொன்னோம். அன்று நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த போது, போர் முடிந்து அடுத்தடுத்த நாட்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனைய தலைவர்களான தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக் கொள்வதற்கு முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அன்றைக்கு சொன்னோம். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய வெளிவார அமைச்சரின் சந்திப்புக்கு பிறகு தங்கள் வாயால் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள் என்று சொன்னது.. அவர்கள் வந்து அதைச் சொன்னாலும் தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு வாக்கை பெற்றவர்களே ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு இணங்குவது தேசிய மக்கள் சக்தி சொன்னது சரியானது என்பதை உலகமே ஏற்றுக் கொள்ளும். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை. இதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் அரசியல் தலைவர்களை சந்தித்ததன் முன்னேற்றத்தை கூட இந்த செயற்பாடுகள் இல்லாமல் செய்துவிடும்.

ஜனநாயகம் என்ற பெயரில் பார்த்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு உறுப்பினர் தான் உள்ளது. தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளார்கள்.அந்த ஒன்பது உறுப்பினர்களும் மக்கள் தந்த ஆணைக்கேற்ப செயற்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தேர்தல் காலத்துக்கு மட்டுமே சொல்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த நிலைப்பாட்டுக்கு நேர் மாறாக செயல்படுகிறார்கள்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பில் சமஷ்டி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. எந்த ஒரு இடத்திலும் அதனை செய்யவில்லை.தமிழகத்தில் தமிழகத் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை தடுப்பதற்கு இவர்கள் செயல்படுகிறார்கள்.

இந்த போக்கு தொடரும் வரைக்கும் தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது. ஒற்றையாட்சி முறைதான் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு முறைக்கு அடிப்படை.

மாகாண சபை தேர்தல் நடக்காமலே மாகாண சபைகள் எல்லாம் இயங்குகின்றன என்று சொன்னால் மாகாண முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும் ஏமாற்றமே. மாகாண ஆளுநருக்கு தான் சகல அதிகாரமும் உள்ளது. சட்டரீதியாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்களின் பொறுப்பு. அவர்கள் இல்லாமலே ஆளுநர் செயல்பட முடியும். அதுதான் தற்போது நடக்கிறது. தயவுசெய்து மக்கள் ஏமாற்றத்திற்கு விலை போகக்கூடாது.

மக்கள் விலை போக, விலை போக கிடைக்கும் சந்தர்ப்பங்களை இழந்து கொண்டு போகிறோம். இதனால் தமிழ் மக்கள் அழிகிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் செல்வராஜா கஜேந்திரனையும் அழிப்பது மட்டுமல்ல நீங்களும் அழிகின்றீர்கள். அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *