இந்தியா

வலிமையாகும் திமுக கூட்டணி – அறிவாலயத்துக்கு வந்த புது கட்சி

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழக’ நிர்வாகிகள் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திமுகவின் கூட்டணி பலம் மேலும் அதிகரித்துள்ளது.

2026 தேர்தலில் நான்கு முறை போட்டி இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என களம் அமைந்திருக்கிறது.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு அசுர பலத்துடன் திமுக கூட்டணி இருக்கிறது. அதிமுகவோ பாஜகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததால் அதிருப்தியில் இருக்கிறது.

கம்யூனிஸ்ட் தொடங்கி காங்கிரஸ் வரை எவ்வளவோ பேசி பார்த்தும் எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி சேர முன் வரவில்லை. அதே நேரத்தில் பாமக, தேமுதிக அதிமுக கூட்டணிக்கு இறுதி நேரத்தில் வரலாம் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த பல தேர்தல்களை தனித்தே சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 தேர்தலையும் தனித்து சந்திக்க போவதாக கூறியதோடு பல தொகுதிகளுக்கு வேட்பாளரையும் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய், தனி கூட்டணி அமைத்து தான் போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் பல்வேறு சங்கங்கள், அரசியல் அமைப்புகள் உள்ளிட்டவையும் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வந்திருக்கிறது.

பிஎல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையிலான நமது மக்கள் முன்னேற்ற கழகம் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே சொன்னது போல மிக வலிமையான கூட்டணி பலத்தை கொண்டிருக்கும் திமுகவுக்கு இது மேலும் வலிமை சேர்க்கும் என்கின்றனர்.

அடிப்படையில் சாதி அமைப்பான தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பின் தலைவர் தான் ஜெகன்நாத் மிஸ்ரா. கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் இந்த பேரவை அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. மதுரையம்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ உதயமான நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *