இலங்கை

பெண் உறுப்பினர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா எம்.பி; வாசலில் நின்று மல்லுகட்டிய காட்சி

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் கூட்டமானது நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இரண்டு பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள், “நல்லூரை இடிக்கும்படி கூறினீர்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, “தையிட்டியில் போராட்டம் செய்கின்ற கூட்டம் நீங்கள்தான்; இருந்து குழப்புங்கள்” என்று கூறிய எம்.பி., பெண்கள் என்றும் பாராமல் அநாகரிகமான சொற்களால் அவர்களைத் திட்டியுள்ளார்.

இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள் “சேர், நீங்கள் மரியாதையாகப் பேசுங்கள்” என்று கூறி விவாதித்தபோது, அவர்களைத் தாக்கும் பாணியில், குரலை உயர்த்தி மிரட்டியவாறு அவர்களின் அருகே சென்றதை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும் ஐந்திற்கும் மேற்பட்ட பொலிஸார் அந்த இடத்தில் நின்றபோதும், அவரைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததையும் அவதானிக்க முடிந்தது.

முன்னதாக தம்மை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை என்று கூறி கூட்ட மண்டபத்திற்கு வெளியே உறுப்பினர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர். இந்நிலையில் கூட்டமானது பரபரப்புக்கு மத்தியில் ஆரம்பமானது.

இதன்போது வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கு மண்டபத்தின் முன்பக்கத்தில் வலது புறமாக ஆசனம் ஒதுக்கப்பட்டது.

இதன்போது குறித்த ஆசனத்தில் அமர்வதால் தன்னால் கூட்டத்தை தலைமை தாங்குபவரது முகத்தை சரியாக பார்க்க முடியாது உள்ளதாகவும், ஆசனத்தை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது மேடையில், பிரதேச செயலருக்கு அருகாமையில் ஆசனம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த இடத்தில் அமர வைக்க முடியாது என்றும், மேடைக்கு முன்பாக ஆசனம் ஒதுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார். இதன்போது அங்கே குழப்பநிலை ஏற்பட்டது.

பின்னர் தவிசாளருக்கு மேடைக்கு முன்பாக ஆசனம் வழங்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *