இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட மோசமான ஒரு சட்டத்தைக் கொண்டுவரவுள்ள அநுர அரசு – சாடும் ரஜீவ்காந்த்

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், தற்போது அதைவிடவும் மோசமான ஒரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாக சமூக ஆர்வலர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற ‘மக்கள் போராட்ட முண்ணனியின்’ ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது மனித உரிமைகளை முற்றாக மீறும் செயல் என்றும், அது நீக்கப்பட வேண்டும் என்றும்  தொடர்ச்சியாக போராடி  வருகிறோம். முன்னதாக தேசிய மக்கள் சக்தி கட்சியினரும் இந்தப் போராட்டங்களில் தங்களோடு இணைந்து நின்றேன்.

ஆனால், இன்று அதே தேசிய மக்கள் சக்தி அரசு, பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கக்கூடிய, இன்னும் மோசமான ஒரு சட்டத்தை உருவாக்குகின்றனர்.

புதிய சட்டத்தின் கீழ், எவ்வித நீதிமன்ற அனுமதியுமின்றி எவருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்து சோதனை நடத்தவும், எவரையும் கைது செய்து தடுத்து வைக்க பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றன.

ஒரு குற்றவாளியை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமே தவிர, பொலிஸாரோ பாதுகாப்புத் துறையோ ஒரு கையெழுத்தின் மூலம் அதைச் செய்ய முடியாது.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இந்தச் சட்டத்தில் சரியான வரையறை இல்லை . தொழிற்சங்கப் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் , தமிழ் மக்களின் அரசியல் கோஷங்கள் மற்றும் உரிமைப் போராட்டங்கள் ஆகிய அனைத்தும் ‘பயங்கரவாதம்’ எனச் சித்திரிக்கப்படும் அபாயம்.

விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பிறகு, பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அப்பாவித் தமிழ் மக்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையின்றி பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர் .

அண்மைக் காலங்களில் பாலஸ்தீனத்திற்காகக் குரல் கொடுத்த முஸ்லிம் இளைஞர்கள் (ருஸ்தி, சொகைல்) ,, வைத்தியர் ஷாபி மற்றும் ரம்சி ராசிக், அரகலய போராட்டக்காரர்கள் (வசந்த முதலிகே, ஸ்ரீ தம்ம ஹிமி, ஹசான் ஜீவந்த),  ஆகியோருக்கு எதிராக இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

வடகிழக்கு மக்களிடம் வாக்குக் கேட்கும் போது, “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்” என NPP அரசு பொய் கூறி வாக்குகளைப் பெற்றனர்.

இத்தகைய பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுவது மிகப்பெரிய ஊழல், தேசிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ் உறுப்பினர்கள் தங்களின் இந்த நிலையை எண்ணி வெட்கப்பட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *