இந்தியா

இந்திய பாராளுமன்றில் செம்மணி விவகாரம்; தமிழக காங்கிரஸ் எம்.பி.எழுப்பினார்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் இலங்கை அரசிடம் முழு வெளிப்படைத்தன்மையை கேட்டும், சர்வதேச கண்காணிப்பில் ஒரு நியாயமான விசாரணைக்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்தியபாராளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சசிகாந் செந்தில் வலியுறுத்தினார்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் சசிகாந் செந்தில் இது தொடர்பில் வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் தோண்டியெடுக்கப்பட்ட எச்சங்கள், பல வருட போராட்டத்தில் கொல்லப்பட்ட தமிழ் இனத்தின் ஒடுக்கப்பட்ட குரல். ஈழத் தமிழர்களுடன் மொழி, கலாசாரம் மற்றும் வரலாறு என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவாகிய தமிழ் மக்களுக்கு, இது எங்கோ நடந்த ஒரு சோக செய்தி அல்ல. பல காலங்களாக தமிழ் மக்களின் இதயங்களில் வடுவாகி நின்று விட்ட காயம்.

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதைகுழிகள் வெறும் ஒரு வழக்கின் விசாரணைக்காக கண்டுபிடிக்கப்பட்டவை என்று கடந்து செல்ல முடியாது. ஏனென்றால் அது ஒரு இனம் பல தலைமுறையாக நீதிகேட்டு போராடி மடிந்ததின் தடயம்.

இந்தியா, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த சூழலினை கருத்தில் கொண்டு, இலங்கை அரசிடம் முழு வெளிப்படைத்தன்மையை கேட்டும், சர்வதேச கண்காணிப்பில் ஒரு நியாயமான விசாரணைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் .

யாழ்ப்பாண மண்ணிலிருந்து ஈழத்து தமிழ் சொந்தங்களின் எலும்பு கூடுகள் மண் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்படும் இந்த நேரத்தில், இந்தியா வெறும் ஒரு அண்டை நாடாக இல்லமால், மனித நேயத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு கிடைக்கவேண்டிய நீதிக்காக நிற்க வேண்டும். தமிழ் மக்களின் சொந்தங்களாக இன்றுவரை அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இந்த மாபெரும் அநீதியை கண்டு அமைதியாக கடந்துவிட முடியாது.

ஈழத் தமிழர்களுக்கான நீதி என்பது வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமானது. தமிழர்களாக அதை நாம் உறுதியுடன் வலிமையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *