பேரழிவைச் சமாளிக்க இந்த பட்ஜெட் உதவாது; நாமல் எம்.பி.யும் கூறுகிறார்

அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஸ இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை கூறிக்கொள்கின்றேன். இந்த அனர்த்தங்களுக்கு 15 இலட்சம் வரையிலானோர் முகம்கொடுத்துள்ளனர். இந்த நேரத்தில் அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது சிக்கலானது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீட்பதற்கு மேலதிகமாக நிதி செலவிட வேண்டும். இதனால் இந்த நேரத்தில் வேலை செய்யக்கூடியவாறு வரவு செலவுத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோன்று இந்த நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் செல்லவும் முடியாது. இது தொடர்பிலும் அவதானத்தை செலுத்துமாறு கோருகின்றோம்.
கிராமங்களில் மக்கள் பெரும் அழுத்தங்களுடன் இருக்கின்றனர். உயிர்களை இழந்தும், சொத்துக்களை இழந்தும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்துவருகின்றனர். இவர்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்துங்கள் என்று கோரிக்கை விடுகின்றோம் என்றார்.
![]()