இலங்கை

ஹட்டனில் வீடுகளுக்கு புகுந்த வெள்ளம்; பல குடும்பங்கள் இடம்பெயர்வு! பசியால் வாடும் தோட்ட தொழிலாளர்கள்

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 08 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் தற்காலிகமாக தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹட்டன் பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருப்பதுடன், எந்த தொலைபேசி வலையமைப்பும் செயல்படாத சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பிற அவசர நிவாரணங்களை வழங்குவது சிரமமாகியுள்ளது.

பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடி உணவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், கொட்டகலை ஆறுப்பெருக்கெடுத்ததால் கொட்டகலை லொக்கீல் தோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அங்கு வசிக்கும் குடும்பங்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாக தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் மழை தொடர்ந்தும் பெய்துவருவதால் மேலும் பல வீடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *