இலங்கை

புலி பயங்கரவாதிகளை ‘வீரர்கள்’ போல் கொண்டாட அனுமதித்தமை அரசின் கோழைத்தனம்;  சரத் வீரசேகர காட்டம்

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் ‘வீரர்கள்’ போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில்,

நேற்றும் இன்றும் மாவீரர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்வைக் கண்டோம். பிரதேசங்கள் முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள், அதாவது விடுதலைப் புலிகளின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் பாடல்களுடன் பாரிய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பிரபாகரனின் பிறந்த நாளில், நாட்டின் பிரிவினைக்காக, தனிநாடு கோரி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளை ‘வீரர்கள்’ போல கொண்டாடுவதற்கு இடமளிப்பது அரசாங்கத்தின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு போரில் வெற்றி பெற்ற அரசாங்கம், அந்த பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. ஆனால், இந்த அரசாங்கம் அந்தப் பொறுப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டது.

எந்தத் தாயும் தனது பிள்ளைப் பயங்கரவாதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருந்தாலும், வீட்டில் ஒரு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், குழுவாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் இதுபோன்ற கொண்டாட்டங்களை நடத்துவது பிரிவினைவாதத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கும் சமமாகும்.

நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன், மீண்டும் ஒரு போரைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா? இத்தகைய செயல்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படுமா? இது மேலும் பிரிவினையைத் தான் உருவாக்கும். இவற்றை நிறுத்துவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கனடாவுக்குச் சென்று, கனடா தமிழ் காங்கிரஸ் நடத்திய நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசும்போது, கனடாவில் வீதியை மூடி போராட்டங்கள் நடத்திய டயஸ்போரா தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உலகின் ஒரே நாடற்ற இனம் தமிழர்கள் என்றும், அது தமக்கு ஒரு துரதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நாட்டிலும் ஒரு தனி நாட்டை அல்லது தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர் கூறுகிறார். இது மீண்டும் விடுதலைப் புலிகளுக்குத் தலைதூக்க இராசமாணிக்கம் பகிரங்கமாக அழைப்பு விடுப்பது போல் தெரிகிறது.

அவர் ஒருமித்த நாட்டிற்கு (Unitary State) சத்தியப்பிரமாணம் செய்தவர் என்பதால், அவர் ஒரு தனிநாடு பற்றிப் பேசினால், அவரால் பாராளுமன்றத்திற்கு வர முடியாது.

எமது இராணுவம் 295,000 அப்பாவி தமிழ் மக்களை மீட்டே இந்தப் போரில் வெற்றி பெற்றது. அந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீண்டும் குடியேற்றினோம்.

தமிழ் மக்களுக்கு அன்பு காட்டுவதாகக் கூறும் இந்தத் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அப்போது உதவி செய்ய வந்தார்களா?

இன்று வடக்கிலும் வெளிநாடுகளிலும் அமர்ந்துகொண்டு இத்தகைய போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இது தேசத்துரோகச் செயலாகும்.

மட்டக்களப்பு, வவுணதீவில் அண்மையில் தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டதைக் கண்டோம். இது பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றம் என்பதால், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தால் பிணை கிடைக்காது. ஆனால், அதைத் தவிர வேறு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மட்டும் 528 பௌத்த நினைவுச்சின்னங்கள் / தொல்லியல் தளங்கள் உள்ளன. வேறு எந்தப் பகுதியிலும் இத்தகைய எதிர்ப்பு இல்லை. இந்தப் பகுதிகளில் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது, ‘இவை எமது பூர்வீக நிலம்’ என்று காட்டுவதற்கே. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசாங்கம் உடனடியாக இந்த நபர்களுக்கு எதிராகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *