இலங்கை

மட்டக்களப்பில் தொல்பொருள் பெயர்ப்பலகை நிறுவ முயற்சி – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் செயல்பாடு இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணன்புரம் எல்லைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களமும் பொலிஸாரும் பெயர்ப்பலகை நிறுவ நேற்று மாலை முயன்றபோது, பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

மழையிலும் காற்றிலும் கூடிவந்த பொதுமக்கள் பெயர்ப்பலகை இட அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தியதால், அதிகாரிகள் அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோன்ற முறையில் கடந்த 21ஆம் திகதியும் கண்ணன்புரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கண்ணன்புரம் நூற்றுக்கணக்கான தமிழர்கள் வசிக்கும் பகுதியானதால், தொல்லியல் நடவடிக்கைகள் தங்களின் வாழ்வாதாரத்துக்கும் நில உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என மக்கள் கவலை தெரிவித்தனர்.

முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் தொல்லியல் பெயரில் பிற மறைமுக நடவடிக்கைகள் நடக்கும் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

பொலிஸார் “இது அடையாள பதாகை மட்டுமே” என விளக்கம் அளித்தபோதிலும், பொதுமக்கள் அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இறுதியில், பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பெயர்களை பதிவு செய்துகொண்டு, பெயர்ப்பலகை இடும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தினர்.

இதேபோன்று, கல்லடி பிள்ளையார் ஆலயப் பகுதியிலும் பெயர்ப்பலகை நிறுவும் முயற்சி இடைநிறுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *