இலங்கை

ஒரு சமூகத்தை முன்னிறுத்திய சட்டங்கள் ஒருபோதும் சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தாது சத்தியலிங்கம் தெரிவிப்பு

பல்லினசமூகங்கள் வாழுகின்ற நாட்டில் ஒரு சமூகத்தை முன்னிறுத்தி இயற்றப்படும் சட்டங்கள் ஒருபோதும் சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக இனங்களுக்கிடையே முரண்பாட்டையே தோற்றுவிக்குமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மீதான விவாதத்திலே கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த அமைச்சு அரச இயந்திரத்தை சுழலச்செய்யும் பிரதான அச்சாணியாக அமைந்துள்ளது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் 3 படி நிலைகளில் அரச நிர்வாகம் நடைபெறுகின்றது.

மத்திய அரசு – பொது நிர்வாகம், மாகாண சபை – மாகாண சபைகள், உள்ளுராட்சி – உள்ளுர் அதிகார சபைகள் ஆனாலும் அரசியலமைப்பு ரீதியாக இவ்வாறாக அரச நிர்வாக நடைமுறைகள் முறையாக வகுக்கப்பட்டு அவை சட்டமாக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கல் மூலம் வெவ்வேறு மட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அவை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

காலணித்துவ ஆட்சிக்கு பின்னர் சுதந்திர இலங்கையின் நிர்வாக கட்டமைப்பானது மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதாக உள்ளது.

ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் திருத்தங்களால் அதிகார பரவலாக்கல் நடைபெற்றிருந்தாலும் நாட்டில் வாழுகின்ற பல் இன குழுமங்களின் தனித்துவமான இன,மத,மொழி, கலாசார அடையாளங்களை பாதுகாக்க தவறியதன் காரணமாகவும் அவர்களை இந்த நாட்டின் இரண்டாந்தர பிரசைகளாக நடத்தியதாலும் சமூகங்களுக்கடையேயான கசப்பான வரலாற்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாட்டில் குறிப்பிட்டவொரு சமூகத்தை முன்னிலைப்படுத்தி இயற்றப்படுகின்ற சட்டங்கள் ஒருபோதும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

மாறாக சமூகங்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதுடன் நாட்டை நேசிக்கின்ற வளமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியாது.

நாட்டில் எங்குமில்லாத நிர்வாக நடைமுறை எமது மாகாணத்தில் காணப்படுகிறது.

மகாவலி “எல்” வலயம் கொண்டுவரப்பட்டு மாகாணத்திற்கு வெளியே இருந்து சிங்கள மக்கள் முல்லைத்தீவு வவுனியா மாவடங்களில் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான புதிய பிதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு முல்லைதீவு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது.

அப்பிரதேச செயலாளர் பிரிவு 6 வட்டாரமாக பிரிக்கப்பட்டு அதில் 5வட்டாரங்கள் வவுனியா வடக்கு பிரதேச சபையுடனும் ஒரு வட்டாரம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையுடனும் இணைக்கப்பட்டு அவர்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

திட்டமிட்டவகையில் எமது மாவட்டங்களின் இனப்பரம்பலை மாற்றும் நோக்கத்திலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கமாக செய்யப்பட்ட இச்செயற்பாடு அங்கு அங்குவாழும் மக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு குடியேற்றப்பட்ட மக்களுக்கும் பூர்வீக குடிகளுக்குமிடையே மோதல் நிலையை ஏற்படுத்தும்.

குடியேற்றவாசிகளுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக பூர்வீக தமிழ் மக்களுடைய குளங்கள் விளைநிலங்களை அபகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

அதில் ஒன்றுதான் “திரிவைத்தகுள ஆக்கிரமிப்பு”.

மகாவலி அதிகாரசபை, வனவள தினைக்களம் பொறுப்பற்ற வகையில் இனமுரன்பாட்டை தோற்றுவிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள்.

கிவுலுஓயா நீர்பாசன திட்டம்”. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பல குளங்கள் அதனோடிணைந்த காணிகள் நீரேந்து பகுதிக்குள் உள்வாங்கப்படும்.

எவ்வாறு இந்த பிரச்சனைகளை தீர்க்கப்போகிறீர்கள்.

இதற்காக விசேட குழுவொன்றை நியமித்து தீர்வை காணுங்கள்.

மணலாறு பிரதேச செயலாளர் பிரிவை உள்ளடக்கியதாக பிரதேச சபையை நிறுவுங்கள், அங்கு குடியேற்றப்பட்ட மக்களுக்கு சேவையை வளங்க ஏற்பாடுகளை செய்யுங்கள்.

அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பிரதேச சபைகளை பிரித்து தனியான பிரதேச சபைகளை உருவாக்கி மக்களுக்கான சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்.

உ-ம்: புதுக்குடியிருப்பு, மடு

உங்கள் அமைச்சிற்கு உட்பட்ட பல பிரச்சனைகள் அங்கு காணப்படுகிறது. கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புங்கள். இதனால் மக்களுக்கான சிறப்பான சேவையை வளங்கலாம்.

டிஜிற்றலேசன் திட்டத்தை மிக அடிப்படை மட்டத்தில் செய்கின்ற உத்தியோகத்தர்கள் தமது தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கான இலத்திரனியல் சாதனங்களை வளங்க ஏற்பாடு அவசியமானது.

சாத்தியமான இடமாற்ற கொள்கை அற்றநிலையில் பலர் தொடர்ந்தும் கஸ்ர பிரதேசங்களிலேயே பணி செய்கிறார்கள், தண்டனை பெறுபவர்களை கஸ்ர பிரதேசங்களுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்துங்கள், அவர்கள் மேலும் அங்கு பிரச்சனைகளை உண்டுபன்னுவார்கள். அவர்களை அதிகாரிகளின் கண்காணிப்பில் வைத்து உச்சமான உழைப்பை பெற நடவடிக்கை எடுங்கள்.

 

தேர்தல்களை நடாத்துவதற்காக 5.0 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிவருகிறோம்.

தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விழைவாகவே மாகாணசபை முறைமை அரசியல் அமைப்பினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாகானசபையை தமிழ் மக்கள் தங்களது தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இருந்தபோதும் குறைந்த அதிகாரங்களை கொண்ட அந்த மாகாணசபையைக்கூட இயங்குநிலையில் வைத்திருப்பதற்கு எந்தவொரு அரசும் விரும்பாதநிலையை பார்க்கும்போது மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறும் அரசாங்கங்கள் இந்தநாடு ஒரு பல் இன, பல மொழி பேசுகின்ற பல தேசிய இனங்கள் கூடிவாழும் நாடாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை உணர்ந்துகின்றது.

அவ்வாறு தேர்தல்களை நடாத்தினால் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைகளினால் மக்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்யவதற்கான இயலுமையை மட்டுப்படுத்துவதே வரலாறு.

உள்ளுராட்சி மன்றங்களாக இருக்கட்டும் மாகாண சபைகளாக இருக்கட்டும் முழுஅதிகார பலத்துடன் மத்திய அரசின் அதிகார, அரசியல் தலையீடின்றி; சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும்.

இச்சபைகள் வருமானத்தில் தன்னிறைவடைந்து மக்களுக்கான சேவையை வழங்க மத்திய அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சபைகளுக்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி பாரபட்சமின்றி அனைத்து சபைகளுக்கும் பகிரப்படுதல் வேண்டும். எனவே உள்ளுராட்சி சபைகள் சுயமாக இயங்கக்கூடிய வகையில் பின்வரும் விடயங்களை முன்மொழிகின்றேன்.

உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொதுவான விடயமாக இருந்தாலும் பொதுவாக இருந்தாலும் எமது பிரதேசங்களில் உள்ள சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

வருமானத்தை அதிகரிப்பதற்கு ஆதனவரி அறவீடு மிகவும் முக்கியமானது.ஆனால் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் ஆதன வரி மதிப்பீடு இதுவரை செய்யப்படவில்லை.

மதிப்பீட்டாளர்களுக்கான ஆளணிப்பற்றாக்குறை நிலவுறது.

இதற்காக விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் விலைமதிப்பீட்டு பணிகள் முடிக்கப்படல் வேண்டும்

அதே போன்று உள்ளுராட்சி சபைகளில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை, வாகனங்கள், இயந்திர உபகரணங்களை வழங்கி வினைத்திறனுடன் சபைகள் இயங்குவதற்கு இந்த பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்த வேண்டும்.

அதே போன்று தேர்தல்கள் செலவுக்காக 5.0 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடைபெறாதுள்ள மாகாண சபைத்தேர்தல்களை நடாத்துவதன்மூலம் அரசியல் சாசனத்திலுள்ள அதிகாரங்களை மக்கள்மயப்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *