புத்தர் சிலை பிரதிஷ்டை விவகாரத்தை நாமும் ஐ.ம.ச.வும் அரங்கேற்றினோமா?

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை விவகார நாடகம் எங்களுடையதென்றால் அந்த நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கத்தினர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட விடயம் பற்றி அரச தரப்பினர் பல விடயங்களை கூறினார்கள் பொதுஜன பெரமுனவின் நாடகத்தை, ஐக்கிய மக்கள் சக்தி தோளில் சுமந்துச் செல்வதாக அரச தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார்கள்.திருகோணமலை விகாரை புத்தர் சிலை பிரதிஷ்டை விடயம் எங்களது நாடகம் என்றால் அந்த நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கத்தினர்தான்.
புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்த போது அங்கு இரண்டு பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளார்களா? இந்த அரசாங்கம் மதத்துக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றார்
![]()