இலங்கை

திருமலை புத்தரால் சபையில் சர்ச்சை!

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் நேற்று திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லையென அதற்கு எதிராக தயாசிறி எம்.பி கடும் கோசங்களை எழுப்பிய நிலையிலேயே சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியபோது, சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பிப்பு மற்றும் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் பின்னர் பிரதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, திருகோணமலை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க எழுந்த போது, தயாசிறி ஜயசேகர எம்.பி ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி அமைச்சரிடம் சில விடயங்களை கேட்க வேண்டும் என்றார்.

இதன்போது அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

இவ்வேளையில் தயாசிறி ஜயசேகர கூறுகையில்,

அரசியலமைப்பின் 9ஆவது சரத்திற்கமைய இலங்கை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுடன், அதன் 10 மற்றம் 14ஆம் பிரிவுகளுக்கமைய மதங்களுக்குரிய உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திருகோணமலை சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் சில விடயங்களை கேட்கின்றேன் என்றார்.

இந்நிலையில் அதற்கு மேல் பேசுவதற்கு தயாசிறி எம்.பிக்கு அனுமதி வழங்க மறுத்த சபாநாயகர், அமைச்சரை தொடர்ந்தும் உரையாற்றுமாறு கூறினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் உரையாற்றிய பின்னர், அமைச்சர் கூறுவதில் தவறு உள்ளது என்றும், இதனால் தனக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்க அனுமதி வழங்குமாறும் தயாசிறி எம்.பி கோரினார்.

ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்காமல் பிரதான சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். இவ்வேளையில் தயாசிறி எம்.பி கடும் ஆவேசமாக சபாநாயகரை நோக்கி கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். இதனால் சில நிமிடங்கள் சபையில் அமைதியின்மை நிலவியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *