நாட்டில் போதைப் பொருள் இருப்பு முடிவுக்கு வருகிறது!; போதைப் பொருள் வருகை முடக்கம்!

நாட்டில் போதைப் பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை காரணமாக போதைப் பொருளுக்கு பெரும் தட்டுப்பாடுகள் உருவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் போதைப் பொருளை இல்லாது ஒழிக்கும் வகையில் அரசாங்கத்தால் கடந்த 30ஆம் திகதி முதல் முழு நாடும் ஒன்றாக என்ற தொனிப்பொருளில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி நாடு முழுவதும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், கடல் பகுதிகளிலும் கடற்படையினர் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதங்களில் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட பெருமளவான பொதைப் பொருட்கள் கடலில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டள்ளன.
இதன்படி நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படும் பெரும்பாலான வழிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், நாட்டுக்குள் விநியோக செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இதனால் போதைப் வியாபாரிகளில் பெரும்பாலானவர்கள் அதில் இருந்து ஒதுங்க ஆரம்பித்துள்ளதாகவும், இதன் காரணமாக விநியோக கட்டமைப்பு முடக்கப்பட்டு போதைப் பொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளதுடன், அதன் விலைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சில இடங்களில் சூட்சுமான முறைகளில் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அவ்வாறான இடங்களையும் கண்டறிந்து முழுமையாக போதைப் பொருள் விநியோக கட்டமைப்பை முடக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை போதைப் பொருள் தட்டுப்பாடு காரணமாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பலர் புனர்வாழ்வுக்கு அதிகாரிகளிடம் இணங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()