அவுஸ்திரேலியாவில் தூதரகம் கட்டுவதற்கான சட்டப் போராட்டம்; ரஷ்யா தோல்வி

அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் புதிய தூதரகம் கட்டுவதற்கான சட்டப்போராட்டத்தில் ரஷ்ய அரசு தோல்வியடைந்தது.
2008ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் உள்ள இடத்திற்கு, ரஷ்யா குத்தகை உரிமம் கோரியது.
அதற்காக கிட்டத்தட்ட 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை ரஷ்யா செலுத்தியது. பின்னர் 99 ஆண்டுகளுக்கு அந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டது.
அந்த இடத்தில் ரஷ்யா தனது புதிய தூதரகத்தை கட்டும் பணியை தொடங்கியது. ஆனால் 2023ஆம் ஆண்டில், ரஷ்யாவின் திட்டம் தொடரப்படுவதைத் தடுக்கும் ஒரு சட்டத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதன் காரணமாக ரஷ்யாவின் குத்தகை ரத்து செய்யப்பட்டது.
அப்போது, நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் ஒரு புதிய கட்டிடத்தை ரஷ்யா அமைப்பது ஆபத்து என்று, உளவுத்துறையிடம் இருந்து தெளிவான பாதுகாப்பு ஆலோசனையை பெற்றதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) கூறினார்.
அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பில் சட்டப்போராட்டத்தைத் தொடங்கியது.
ரஷ்யவை பிரிதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், “சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று வாதிட்டனர்.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் நடந்த சட்டப்பூர்வ முயற்சியில் ரஷ்ய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சட்டம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் உறுதி செய்தது. எனினும், அவுஸ்திரேலிய அரசாங்கம் ரஷ்யாவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
![]()