யாழ்ப்பாணம் குறித்து அரசு விசேட கவனம்!; அமைச்சர் ஆனந்த விஜேபால

திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் .அங்குள்ள வன்முறைக்கும்பல்கள், வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட எம்.பி. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச்செயல்களை ஒழிக்க ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைக்கு மக்கள் மகிழ்ச்சி வெளியிடுகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி கொக்குவில் சந்தைகளில் போதைபொருள் மாபியாக்கள் சில தினங்களுக்கு முன்னர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். சந்தைக்கு வந்த மக்களை துன்புறுத்தி தாக்கியுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் விற்று அந்த பணத்தை அதிக வட்டிக்கு கொடுப்பதற்காக பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இதுபோன்ற சம்பவங்களை அங்கே கட்டுபடுத்த வேண்டும். இதன்படி அது தொடர்பில்முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்பி கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில்,
அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம். அண்மையில் குறைச்செயல்கள் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன. அதன்படி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகள், வன்முறைக்கும்பல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்.
![]()