இலங்கை

துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுங்கள்

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமாகயிருந்தால் மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்ல வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வடமராட்சி கிழக்கில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிகையில்,

கார்த்திகை மாதம் என்பது தேச விடுதலைக்காக தமது இன் உயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூறுகின்ற மாதம்.அந்தவகையிலே கார்த்திகை 21 தொடங்கம் 27 ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசமெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தாயகத்திலே ஒரு சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் அகன்றிருக்கின்றனர். கணிசமான மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ முகாம்கள் உள்ளன.
இதனால் ஒவ்வொரு வருடமும் தமது பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நினைவேந்தல் செய்வதற்கு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

அந்தவகையிலே இந்தவருடமும் மாவீரர் வாரத்தை சிறப்பாக அனுஸ்டிப்பதற்கு எஞ்சியிருக்கின்ற மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி ஒரு தேசிய நல்லிணக்கத்தோடு, விட்டுக்கொடுப்போடு இந்த வருடமும் மாவீரர்களை நினைவேந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கடற்றொழில் அமைச்சர் ஒரு அறிவித்தலை விடுத்திருக்கின்றார். அதாவது மாவீரர் துயிலுமில்லங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளருக்கு கொடுத்திருக்கின்றார்.

எதிர்வரும் காலங்களில் மக்கள் சுதந்திரமாக மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

நாங்கள் அந்த கருத்தை வரவேற்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இது பேச்சளவிலே இல்லாமல் செயலளவிலே இருக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *